ஐடி நிறுவனங்களின் ‘ஏஐ’ ரூட்: கேம்பஸ் கனவுகள் கலைகிறதா? பிரெஷர்கள் அதிர்ச்சி!
இந்திய தகவல் தொழில்நுட்ப (IT) துறையில் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பின்பற்றப்பட்டு வந்த பாரம்பரிய ‘பிரமிடு’ வேலைவாய்ப்பு மாதிரி (Pyramid Hiring Model) தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வருகையால் முற்றிலுமாக தலைகீழாக மாறத் தொடங்கியுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் இருந்து ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பிரெஷர்களை (Freshers) மொத்தமாக அள்ளிச் செல்லும் நிறுவனங்களின் உத்தி, இப்போது சுருங்கி வருகிறது. அதே நேரத்தில், குறிப்பிட்ட ஏஐ மற்றும் தொழில்நுட்பத் திறன்களைக் கொண்ட இளைஞர்களுக்கு நிறுவனங்கள் வாரி வழங்கும் சம்பளத்தின் அளவு விண்ணைத் தொட்டுள்ளது.
சரிந்து வரும் பிரெஷர்களின் வேலைவாய்ப்பு சந்தை
கடந்த சில ஆண்டுகளின் புள்ளிவிவரங்களை உற்று நோக்கினால், ஐடி துறையில் நுழைவு நிலை (Entry-level) வேலைவாய்ப்புகளின் பங்கு எவ்வளவு வேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது என்பது தெளிவாகப் புரியும். மனிதவள மேம்பாட்டு நிறுவனங்களின் தரவுகளின்படி, ஐடி துறையில் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் பிரெஷர்களுக்கான பங்கு 2024-ஆம் ஆண்டில் 28 சதவீதமாக இருந்தது. ஆனால், அது 2025-ஆம் ஆண்டில் 15 சதவீதமாகக் கடுமையாகச் சரிந்துள்ளது.

இதேபோல், 2021-22 நிதியாண்டில் சுமார் 3,80,000 ஆக இருந்த பிரெஷர்களின் சேர்க்கை, 2023-24-ல் 95,000 ஆகக் குன்றியது. பின்னர் 2024-25 நிதியாண்டில் 1,20,000 ஆக சற்றே மீட்சி கண்டாலும், முந்தைய காலத்தின் பொற்காலத்தோடு ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவுதான்.
மாறிவரும் தொழில்நுட்பமும் காணாமல் போகும் பணிகளும்
இந்தத் திடீர் சரிவுக்கு மிக முக்கியக் காரணம், உலகளாவிய ஐடி நிறுவனங்கள் தங்களது கவனத்தை ஏஐ, கிளவுட் கம்ப்யூட்டிங், சைபர் செக்யூரிட்டி மற்றும் ஆட்டோமேஷன் (Automation) சார்ந்த பணிகளின் பக்கம் திருப்பியிருப்பதுதான்.
இதன் விளைவாக, முன்பு பிரெஷர்களுக்குக் கொடுக்கப்பட்டு வந்த வழக்கமான கோடிங் எழுதுதல் (Repetitive coding), மென்பொருள் சோதனை (Testing) மற்றும் அடிப்படை ஹெல்ப் டெஸ்க் (Basic helpdesk) போன்ற பணிகள் இப்போது ஏஐ டூல்களாலேயே எளிதாகச் செய்யப்பட்டு விடுகின்றன. எனவே, இப்பணிகளுக்கான தேவை முற்றிலுமாக முடங்கியுள்ளது. தற்போது ஒட்டுமொத்த ஐடி வேலைவாய்ப்புச் சந்தையில் வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பப் பணிகளுக்கான தேவை மட்டுமே 52 சதவீதமாக உள்ளது. இது 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் 60 சதவீதத்தை எட்டும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.
ஜாக்பாட் அடிக்கும் ஸ்பெஷலிஸ்ட் பிரெஷர்கள்: 21 லட்சம் வரை சம்பளம்!
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ் (TCS), இன்ஃபோசிஸ் (Infosys) போன்றவற்றின் செயல்பாடுகளிலேயே இந்த மாற்றம் ஏற்கனவே பிரதிபலிக்கத் தொடங்கிவிட்டது. ஒரு காலத்தில் ஆண்டுக்கு 50,000 பிரெஷர்களை வேலைக்கு எடுத்து வந்த டிசிஎஸ் நிறுவனம், தற்போது அந்த எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்துவிட்டது.
இருப்பினும், இந்தச் சரிவுக்கு மத்தியில் ஒரு வெள்ளி வரியாக (Silver Lining) சிறப்புத் திறன் கொண்ட பிரெஷர்களுக்கான ஊதியம் தாறுமாறாக உயர்ந்துள்ளது. இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்களில், ஏஐ மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத் துறைகளில் (Digital niches) நிபுணத்துவம் பெற்ற பிரெஷர்களுக்கு ஆண்டுக்கு 21 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. உலகளாவிய டெக் ஹப்கள் மற்றும் ஸ்டார்ட்-அப்களுக்கு இணையாக தங்களது திறமைகளைத் தக்க வைத்துக் கொள்ள ஐடி நிறுவனங்கள் இந்த அதிரடிச் சம்பள உயர்வை வழங்குகின்றன.
வாடிக்கையாளர்களின் நெருக்குதலும் சந்தை அழுத்தமும்
ஐடி நிறுவனங்களின் இந்த திடீர் உத்தி மாற்றத்திற்குப் பின்னால் சர்வதேச வாடிக்கையாளர்களின் (Clients) அழுத்தமும் ஒரு முக்கியக் காரணியாக உள்ளது. கார்ட்னர் (Gartner) நிறுவனத்தின் மூத்த முதன்மை ஆய்வாளர் பிஸ்வஜித் மைட்டி இதுகுறித்துக் கூறும்போது, “உலகளாவிய நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பங்களுக்கான தங்களது நிதியை கணிசமாக உயர்த்தி வருகின்றன. அதே நேரத்தில், தங்களது செயல்பாட்டுச் செலவுகளைக் குறைப்பதற்கான (Cost optimisation) அழுத்தத்தையும் வலுவாகக் கொடுத்து வருகின்றன” என்கிறார்.
இதன் காரணமாக, குறைந்த செலவில் அதிக உற்பத்தித் திறனைத் தரும் ஏஐ உள்கட்டமைப்பை நோக்கி ஐடி நிறுவனங்கள் நகர வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. வெறும் பட்டப்படிப்பை மட்டும் நம்பியிருக்காமல், ஏஐ மற்றும் நவீனத் தொழில்நுட்பங்களை முன்கூட்டியே கற்றுத் தேறும் பிரெஷர்களுக்கு மட்டுமே இனி ஐடி துறையின் கதவுகள் அகலத் திறந்திருக்கும் என்பதைத்தான் தற்போதைய சூழல் உணர்த்துகிறது.
வாத்தீ அகஸ்தீஸ்வரன்


