டிசம்பர் 15ம் தேதி முதல் சென்னையில் சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

டிசம்பர் 15ம் தேதி முதல் சென்னையில் சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

மிழ்நாடு அரசு கடந்த ஆண்டு,சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்திய நிலையில் சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் தமிழகத்தில் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் 2023 போட்டி வருகிற டிசம்பர் 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழ்நாடு அரசு சென்னை லீலா பேலஸில் இந்த போட்டிகள் நடைபெறும் என அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு, மாநில விளையாட்டு மேம்பாட்டு கழகம், நாட்வின் கேமிங் உள்ளிட்டோர் இந்த போட்டிகளை இணைந்து நடத்துகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்-2023 போட்டி, சென்னை லீலா பேலஸில் 2023 டிசம்பர் மாதம் 15 முதல் 21-ம் தேதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளது.இந்தப் போட்டியில் 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் கலந்து கொண்டு 7 ரவுண்ட்-ராபின் சுற்றுகள் கிளாசிக் செஸ் வகையில் விளையாடுவார்கள். இப்போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.50 இலட்சம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படவுள்ளது.

இந்தியாவின் தலைசிறந்த செஸ் கிராண்ட்மாஸ்டர்களான டி.குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகைசி போன்ற வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்வதன் மூலம் கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதிபெற வாய்ப்பாக அமையும் மேலும் சர்வதேச கிராண்ட்மாஸ்டர்கள் பர்ஹாம் மக்சூட்லூ, பி. ஹரிகிருஷ்ணா, லெவோன் அரோனியன், பாவெல் எல்ஜனோவ், அலெக்சாண்டர் ப்ரெட்கே. மற்றும் ஸ்ஜுகிரோவ் சனான் போன்ற வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.

செஸ் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்தியது. தற்போது இந்தியாவில் உள்ள கிராண்ட்மாஸ்டர்களில் மூன்றில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி, பிரக்ஞானந்தா. டி. குகேஷ் மற்றும் சமீபத்திய கிராண்ட்மாஸ்டர் வைஷாலி போன்ற வீரர்களுடன் தொடர்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு ரூபாய் 100 கோடி செலவில் சர்வதேச வீரர் வீராங்கனைகள் பங்கேற்ற ’செஸ் ஒலிம்பியாட்’ நடத்தப்பட்டது. இது தமிழ்நாடு அரசிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை தேடித் தந்தது குறிப்பிடதக்கது.

error: Content is protected !!