சர்வதேச கேரட் தினம்-ஆரோக்கியம் தரும் ஆரஞ்சு அதிசயம்!
மண்ணுக்கு அடியில் விளையும் காய்கறிகளில் உலகளவில் மிகவும் பிரபலமானது கேரட். கண்ணைக் கவரும் நிறம், நாவிற்கு இனிய சுவை, உடலுக்குத் தேவையான சத்துகள் என அனைத்தையும் ஒருசேரக் கொண்ட இந்தக் காய்கறிக்காகவே, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 4-ம் தேதி சர்வதேச கேரட் தினம் கொண்டாடப்படுகிறது.
கேரட்டின் வரலாறு: அன்று முதல் இன்று வரை
கேரட் இன்று நாம் பார்க்கும் ஆரஞ்சு நிறத்தில் மட்டும் ஆரம்பத்தில் இருக்கவில்லை. இதன் பிறப்பிடம் என கருதப்படும் மத்திய ஆசியாவில் (குறிப்பாக ஆப்கானிஸ்தான்), இவை முதலில் ஊதா மற்றும் மஞ்சள் நிறங்களில்தான் கிடைத்தன. 17-ம் நூற்றாண்டில் நெதர்லாந்து நாட்டு விவசாயிகள்தான், பல்வேறு ரகங்களை ஒன்றிணைத்து இன்று நாம் விரும்பி உண்ணும் ஆரஞ்சு நிறக் கேரட்டை உருவாக்கினார்கள்.

ஊட்டச்சத்துகளின் களஞ்சியம்
கேரட்டை ‘சூப்பர் ஃபுட்’ என்று அழைப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. இதில் உள்ள சத்துகள் எக்கச்சக்கம்:
-
பீட்டா கரோட்டின்: இது உடலில் சேர்ந்தவுடன் வைட்டமின் ஏ-வாக மாறுகிறது. இது கண்பார்வைக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மிகவும் அவசியம்.
-
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்: செல்களின் சிதைவைத் தடுத்து, இளமையைத் தக்கவைக்க உதவுகிறது.
-
நார்ச்சத்து: செரிமான மண்டலத்தைச் சீராக வைத்து, மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
-
பொட்டாசியம்: இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
பல்துறை பயன்பாடு
சமையலில் கேரட்டின் பங்களிப்பு அலாதியானது. பச்சையாகச் சாலட்களில் சாப்பிடுவது முதல், சூப், பொரியல், சாம்பார் எனப் பல உணவுகளில் இது இடம்பிடிக்கிறது. இனிப்புப் பிரியர்களுக்கு ‘கேரட் அல்வா’ எப்போதும் ஒரு ஃபேவரைட். அதுமட்டுமின்றி, சருமப் பொலிவிற்காக அழகு சாதனப் பொருட்களிலும், இயற்கைச் சாயங்கள் தயாரிக்கவும் கேரட் பயன்படுத்தப்படுகிறது.
ஏன் இந்தத் தினம் முக்கியம்?
கேரட் போன்ற சத்தான உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் அவசியத்தை இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்வதே இத்தினத்தின் நோக்கம். துரித உணவுகளைத் தவிர்த்து, இயற்கையான காய்கறிகளின் பக்கம் மக்களின் கவனத்தைத் திருப்ப இந்த நாள் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
ஆரோக்கியமான வாழ்விற்கு, தினமும் ஒரு கேரட் உண்பதை வழக்கமாக்கிக் கொள்வோம்!
நிலவளம் ரெங்கராஜன்


