பிரதமர் திறந்து வைத்த இந்தியாவின் நீளமான கடல் பாலம் – என்ன ஸ்பெஷல்?

பிரதமர் திறந்து வைத்த இந்தியாவின் நீளமான கடல் பாலம் – என்ன ஸ்பெஷல்?

டும் போக்குவரத்து நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் மும்பைக்கு பக்கத்தில் 1972ம் ஆண்டு நவிமும்பை என்ற புதிய நகரம் உருவாக்கப்பட்டது. அந்த நவிமும்பை நகரம் தற்போது மும்பைக்கு இணையாக பெரும் வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. அந்த நவிமும்பையில் புதிய சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டு அடுத்த ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நவிமும்பையில் இருக்கும் நவசேவா துறைமுகத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் மும்பைக்குள் வருகிறது. இதனால் நகரத்திற்குள் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.முன்னதாக புதிதாக கட்டப்பட்டு வரும் விமான நிலையம் பயன்பாட்டிற்கு வரும் போது மக்கள் மும்பையில் இருந்து நவிமும்பை விமான நிலையத்தை சில நிமிடங்களில் சென்றடையும் வகையில் புதிய கடல் பாலம் கட்டப்பட்டுள்ளது.

சுமார் 21.8 கி.மீ. நீளம் கொண்ட உலகின் 12வது மிகப்பெரிய கடல் பாலமாகப் பார்க்கப்படு இந்தப் பாலம் ரூ.17,840 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்டுள்ளது. இதற்காக ஜப்பான் நாட்டிடம் 15100 கோடி ரூபாய் கடன் பெற்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்துக்கான வேலைகளை கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். கட்டுமானப் பணிகள் கடந்த ஏழு ஆண்டுகளாக நடந்து வந்தன. அதாவது 1963ம் ஆண்டிலிருந்தே இந்த பாலம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. ஒவ்வொரு முறையும் எதாவது ஒரு தடங்கல் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. 2006ம் ஆண்டு தனியார் நிறுவனம் மூலம் இப்பாலம் கட்ட மேற்கொண்ட முயற்சி பலனலிக்கவில்லை. பாலத்திற்கு 2015ம் ஆண்டு சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறப்பட்டது. 2017ல் இத்திட்டத்தை மாநில சாலை மேம்பாட்டுக் கழகத்திடமிருந்து மும்பை மெட்ரோபாலிடன் பெருநகர மேம்பாட்டு ஆணையம் தனது கையில் எடுத்தது. எந்த ஒரு தனிப்பட்ட நிறுவனத்திற்கும் ஒட்டுமொத்தமாக ஒப்பந்தம் கொடுக்காமல் பணிகள் பிரித்துக்கொடுக்கப்பட்டது. இதனால் பணிகள் முழுவேகத்தில் முடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாலம் மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கும், நவி மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்தும். அதேபோல், மும்பையில் இருந்து புனே, கோவா மற்றும் தென்னிந்தியாவுக்கான பயண நேரத்தையும் குறைக்கும். கூடுதலாக மும்பை துறைமுகத்துக்கும் ஜவஹர்லால் நேரு துறைமுகத்துக்கும் இடையிலான இணைப்பையும் இப்பாலம் மேம்படுத்துகிறது.

ஆறு வழி கடல் இணைப்பாக இருக்கும் இந்த மும்பை டிரான்ஸ் துறைமுக இணைப்பு பாலம் சுமார் 16.50 கிலோ மீட்டர் கடலிலும், 5.50 மீட்டர் நிலத்திலும் கட்டப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, டிராக்டர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ள இந்தப் பாலத்தில் நான்கு சக்கர வாகனங்கள் 100 கி.மீ. வேகத்தில் செல்லலாம்.

“அடல் சேது” பாலம் ஒரு பொறியியல் அதிசயமாகும்.

500 போயிங் விமானங்களின் எடைக்குச் சமமான எஃகு மற்றும் ஈபிள் கோபுரத்தின் எடையை விட 17 மடங்கு அதிக எடை கொண்டது. இதன் கட்டுமானத்தில் 1,77,903 மெட்ரிக் டன் எஃகு மற்றும் 5,04,253 மெட்ரிக் டன் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அடல் சேது பாலத்தில் 190 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளது.

ஒரு கணக்கீட்டின்படி, தினமும் ஏறக்குறைய 70,000 வாகனங்கள் இந்தப் பாலத்தைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாலத்தில் ஏறும் போதும் இறங்கும் போதும் உச்ச வேக வரம்பு 40 கி.மீ. ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜன.4-ம் தேதி மகாராஷ்டிரா அரசு இந்தப் பாலத்தில் ஒரு வழியில் பயணம் செய்வதற்கு காருக்கு ரூ.250 சுங்கக் கட்டணம் வசூலிக்கும் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்தது. பாலத்தில் ஒரு முறை சென்று வர காருக்கு ரூ.375 கட்டணம் வசூலிக்கப்படும். தினசரி மற்றும் மாதாந்திர பாஸ்கள் முறையே ரூ.625 மற்றும் ரூ.12,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அதே சமயம் , குறைக்கப்பட்ட பயண நேரம் மற்றும் தூரத்தின் அடிப்படையில் பார்க்கும்போது பயணிகளுக்கு எரிபொருள் செலவில் 500 வரை மிச்சமாகும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது

தானியங்கி சுங்க வசூல் மற்றும் சிறந்த போக்குவரத்து அமைப்பு போன்ற மேம்படுத்தப்பட்ட வசதிகளை உள்ளடக்கியுள்ள இந்தப் பாலம் இந்தியாவிலேயே முதல்முறையாக ஆர்தோட்ரோபிக் ஸ்டீல் டெக் ஸ்பேன்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மூடுபனி, குறைந்த பார்வை மற்றும் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்புகளுக்கு அப்பால் இயங்கும் வாகனங்கள் போன்றவற்றைக் கண்டறிய முடியும்.

இது கப்பல் வழித்தடங்களை தடுக்கும் தூண்களுக்கான தேவையில்லாம் நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு துணை புரிகிறது.

மேலும் இந்தப் பாலத்தில் உள்ளூர் வன உயிரிகளைக் பாதுகாக்கும் வகையில் ஒலி மற்றும் ஒளித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!