விக்டோரியா காலத்து நீதிக்கு மரண சாசனம்!

விக்டோரியா காலத்து நீதிக்கு மரண சாசனம்!

இந்தியாவில் உச்சநீதிமன்றத்திலிருந்து கீழமை நீதிமன்றங்கள் வரை நீதிபதிகள் காலியிடங்களை நிரப்பாமல் ஆண்டாண்டு காலமாக தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள மொத்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் 1016. இதில் கிட்டத்தட்ட 443 இடங்கள் காலியாக உள்ளன. கீழமை நீதிமன்றங்களில் இந்தியாவில் 10 ஆயிரத்துக்கும் மேல் நிரப்பப்படாமல் உள்ளன. பின் எப்படி வழக்குகள் பைசல் ஆகும். வழக்குகள் தேங்கிதான் கிடக்கும். ஹைதராபாத்தில் தெலுங்கானா நீதிபதிகள் ஒரு நாள் சேர்ந்தே விடுமுறை எடுத்து நீதிமன்றத்தைப் புறக்கணித்துப் போராடினார்கள். 14 நீதிபதிகள் ஹைதராபாத்தில் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

edir au 2

அது மட்டுமல்லாமல் தெலுங்கானாவில் நீதித்துறைப் பணியாளர்களும் இக்கிளர்ச்சியில் இணைந்து போராடினர். நீதிபதிகள் போராடுவது ஒன்றும் புதிதல்ல. விடுதலைப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்துக்கூட தஞ்சை மாவட்ட நாச்சியார்கோவில் நீதிபதியாக பொறுப்பில் இருந்தவர் தாவுத்ஷா ஆங்கிலேய அரசை எதிர்த்து போராடியதெல்லாம் செய்திகள். அன்னா ஹசாரே போராட்டம் 2011ல் நடந்தபொழுது அஜய் பாண்டே என்ற சிவில் நீதிபதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதனால் எந்த விளைவுகள் வந்தாலும் சந்திக்கத் தயார் என்றும் வெளிப்படையாக கூறினார்.

நிர்பயா என்ற டெல்லி மருத்துவக்கல்லூரி மாணவி 2013ல் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டபோது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டாமாஸ் கபீர் நானும் இந்தப் பிரச்சினையில் தெருவில் வந்து போராட நினைக்கின்றேன். என்னால் முடியவில்லை. மாணவி நிர்பயாவின் கொலைக்கு நியாயம் கேட்டு போராடுவதை வரவேற்கவேண்டும் என்று வெளிப்படையாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே கூறியிருந்தார். இம்மாதிரியான போராட்டங்கள் துருக்கியிலும், ஏன் எகிப்திலும் கூட நடந்தேறியுள்ளது. எகிப்தில் 2750 நீதிபதிகள் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியதன் விளைவாக அவர்கள் நீதிபதிகள் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்திலும் நீதித்துறையில் போராட்டங்கள் தொடர்கின்றன. தவறான சட்டங்கள் வழக்கறிஞர்களின் உரிமைகளை மறுக்கும்பொழுது போராடிதானே தீரவேண்டும். அதுதான் தமிழகத்தில் நடக்கின்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி பருச்சா, நீதித்துறையில் 20 சதவீத நீதிபதிகள் ஊழலுக்கு துணை போகின்றனர் என்று 23.12.2001ல் வருத்தத்துடன் தெரிவித்தார். 2005ல் செதல்வாட் சொற்பொழிவிலும் அன்றைய தலைமை நீதிபதி ஆர்.சி. லிகோடி நீதிபதிகள் நடத்தை விதிமுறைகளை மீறாதவர்கள் என்று சொல்ல முடியாது. நீதிபதிகளின் மனைவி, மகன், மகள், மருமகன் போன்றவர்கள் அதே நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பணி செய்து ஏதோ ஒரு வகையில் நீதியை திக்குமுக்காட வைக்கின்றனர்.

இம்மாதிரி நீதிபதிகள் உயர்நீதிமன்றத்தில் தற்போது அதாவது 2005ல் 130 இடங்களுக்கு மாற்றவேண்டிய நிலை இன்றைக்கு உள்ளது என்று குறிப்பிட்டார். மேலும் அவர் குறிப்பிடுகையில் கர்நாடகம், ராஜஸ்தான், மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா, பஞ்சாப், ஹரியான உயர்நீதிமன்றங்களில் இம்மாதிரியான நீதிபதிகள் உள்ளனர் என்றும் குறிப்பிட்டார். லகோதி மேலும் லஞ்சம், பாலியல் குற்றச்சாட்டு, அதிகார வரம்பு மீறல் போன்றவற்றில் நீதிபதிகள் பலர் பதவிநீக்கம் செய்யப்படுகின்றனர். கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகள் பலர் கைது செய்யப்படுகின்றனர். நீதிபதிகள் கிளப் ஒன்றில் இலவச உறுப்பினராக சலுகைப் பெற்றதற்காக தலைமை நீதிபதி தட்டிக் கேட்டால் அனைத்து நீதிபதிகளும் கூட்டாக விடுமுறையில் சென்ற சம்பவங்களும் நடந்தேறின. இப்படியெல்லாம் வேதனையான காட்சிகள் நீதித்துறையில் நடந்தேறுகின்றன என்று லகோதி தனது சொற்பொழிவில் குறிப்பிட்டார்.

வழக்கறிஞர்கள் நீதிபதிகளுக்கு கையூட்டுத் தருவதாக கட்சிக்காரர்களை ஏமாற்று வேலையும் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இப்பொழுது வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாக நீதிபதிகளை அணுகக்கூடிய நிலைமை வந்துவிட்டது என்றும் வெளிப்படையாக விவாதங்கள் நடக்கின்றன. இப்படியான புரையோடிய நிலையில் நீதித்துறை. 120வது சட்டக் கமிஷன் அறிக்கையின்படி 10 லட்சம் மக்களுக்கு 50 நீதிபதிகள் அமர்த்தப்பட வேண்டும். ஆனால் இன்றைக்கோ 10 லட்சம் மக்களுக்கு 14 நீதிபதிகள் என்ற அளவே உள்ளது. 3 கோடிக்கு மேலான வழக்குகள் நிலுவையில் உள்ளன. 81 லட்சம் வழக்குகள் 5 ஆண்டுகளாக விசாரித்து தீர்ப்பு சொல்லாமலேயே தூங்குகின்றன.

இவை மட்டுமல்லாமல் உச்சநீதிமன்றத்தின் கிளையை தென்னிந்தியாவில் சென்னையில் அமைக்கவேண்டும் என்ற சட்டக்கமிஷனின் பரிந்துரை நிலுவையில் உள்ளது. கபாலி, சல்மான்கான் பிரச்சினைகளில் உடனுக்குடன் தீர்வு ஏற்படுகின்றது. ஆனால் ராஜீவ் படுகொலையில் 7 பேர் விடுதலை 25 ஆண்டுகள் ஆகியும் தீர்வு எட்டாமல் சிறைக்கோட்டத்தில் வாடுகின்றனர். தீர்வும் நிவாரணமும் எட்டப்படவேண்டிய பலப் பிரச்சினைகளை நீதித்துறை புறக்கணிக்கின்றது.

நீதிபதி கிருஷ்ணய்யர் இதைப்பற்றி குறிப்பிடும்போது “நாம் இன்றைய நீதிபதிகள் அமைப்பை முற்றிலும் மாற்றவேண்டும். அதன் தீர்ப்புகள் மாற்ற முடியாத புனிதம் கொண்டவை என்ற மூட நம்பிக்கையை அகற்றவேண்டும். நீதித்துறையைச் சார்ந்தவர்கள் பெரிய புனிதப் பிறவிகள் அல்ல. அச்சுறுத்தும் ஆடை, அடைமொழி, புறத்தோற்றம் ஆகியவற்றை புனிதத்தோற்றம் என்று கட்டமைக்கப்படுகின்றது. இவையும் சாதாரண மக்களை அச்சுறுத்தவும் செய்கின்றன. இன்னும் பிரிட்டிஷ் மகாராணி காலத்தின் மதிப்பீடுகளை தூக்கிப் பிடித்துக்கொண்டு உண்மைகளை உறங்க வைப்பது நியாயம் கிடையாது. சட்ட விதிமுறைகளும், சிவில், கிரிமினல் சட்டங்களும், சிறை விதிகளும், காவல்துறை செயல்பாட்டு விதிகள் அனைத்தையும் டென்னிசும், மெக்கலேயும் உருவாக்கியது.

இவை நாட்டு விடுதலைக்குப் பின் நம்முடைய தேவைக்கேற்ப நாம் மாற்றிக்கொள்ளவில்லை. இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு நீதித்துறை பல புரட்சிகரமான நியாயமான மாறுதல்களுக்கு உட்படுத்தவேண்டும். பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியா காலத்து நீதிக்கு நாம் மரண சாசனம் எழுதும் துணிவைப் பெறவேண்டும். அதற்கு பதில் உயிர்துடிப்புமிக்க மக்கள் நல புதிய புரட்சி நீதியை நிலைநாட்டுவோம்” என்று கூறியுள்ளார்.இதுதான் இன்றைய நீதித்துறை. யாரும் புனிதர்கள் அல்ல. எல்லோரும் கண்காணிப்புக்கு உட்பட்டவர்கள்தான். எல்லாவற்றிலும் மாற்றங்கள் உண்டு. அந்த மாற்றம் நீதித்துறையிலும் வரவேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

k. s ராதாகிருஷ்ணன்

Related Posts

error: Content is protected !!