மனிதாபிமானப் படை:‘எல்லைகளற்ற மருத்துவர்கள்’ அமைப்பின் வீர வரலாறு!

மனிதாபிமானப் படை:‘எல்லைகளற்ற மருத்துவர்கள்’ அமைப்பின் வீர வரலாறு!

ருத்துவ உலகில் ‘சுயாதீனமான செயல்பாடு’ மற்றும் ‘சாட்சியம் அளித்தல்’ (Témoignage) ஆகிய இரண்டு ஆயுதங்களைக் கொண்டு உலகெங்கும் உள்ள போர் முனைகளிலும், பேரிடர் பகுதிகளிலும் உயிர்களைக் காக்கும் பணியைச் செய்து வருகிறது Médecins Sans Frontières (MSF) எனப்படும் ‘எல்லைகளற்ற மருத்துவர்கள்’ அமைப்பு. ஆம்.. லகில் எந்த இடத்தில்  போர் மூண்டாலும் சரி, இயற்கைப் பேரிடர்கள் நிகழ்ந்தாலும் சரி, எவ்வித அரசியல் லாபமோ, மத அடையாளமோ இன்றி முன்னால் வந்து நிற்பது ‘எல்லைகளற்ற மருத்துவர்கள்’ (Doctors Without Borders) அமைப்பு. 1971-ஆம் ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதி உருவான இந்த அமைப்பின் பின்னணியில் ஒரு பெரும் ரத்த சரித்திரமே உள்ளது.

தொடங்கியது எப்படி?

1967 முதல் 1970 வரை நைஜீரியாவில் நடந்த உள்நாட்டுப் போரின் போது, பயாஃப்ரா மக்கள் பட்டினியால் கொத்து கொத்தாக மாண்டனர். சுமார் 20 லட்சம் பேர் உயிரிழந்த அந்தப் போரில், மக்களுக்குச் சேர வேண்டிய உணவு மற்றும் மருந்துகளை நைஜீரிய அரசு தடுத்தது. அப்போது அங்கு பணியாற்றிய ‘செஞ்சிலுவைச் சங்கம்’ நடுநிலைமை என்ற பெயரில் மௌனம் காத்தது.

அரசுக்கு பயந்து மௌனம் காக்கக் கூடாது என நினைத்த பிரெஞ்சு மருத்துவர்கள், மனிதாபிமானமே முதன்மையானது என முடிவெடுத்தனர். 1970-ல் வங்கத்தில் தாக்கிய ‘போலா புயல்’ ஏற்படுத்திய பேரழிவும் மற்றொரு காரணமாக அமைந்தது. இந்த இருவேறு சூழல்களில் உருவான மருத்துவக் குழுக்கள் இணைந்து, 1971 டிசம்பர் 20-ல் “எல்லைகளற்ற மருத்துவர்கள்” என்ற அமைப்பாக அவதாரம் எடுத்தன.

தனித்துவமான செயல்பாடுகள்

இந்த அமைப்பின் செயல்பாடுகள் உலக நாடுகளை வியக்க வைப்பவை:

  • பாகுபாடற்ற சேவை: இனம், மதம், மொழி அல்லது அரசியல் எல்லைகளைக் கடந்து, தேவையுள்ள எவருக்கும் மருத்துவம் அளிப்பதே இவர்களின் நோக்கம்.

  • நிதிச் சுதந்திரம்: அரசாங்கங்களின் குறுக்கீடு இல்லாமல் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்பதற்காக, இவர்கள் பெருமளவு நிதியைத் தனிமனிதர்களிடமிருந்தே பெறுகின்றனர்.

  • சுமார் 150 நாடுகள்: இன்று 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் இவ்வமைப்பு செயலாற்றி வருகிறது.

சாட்சியம் அளித்தல்: மௌனம் ஒரு கொலை

MSF-ன் மிக முக்கியமான கோட்பாடு Témoignage. அதாவது, உதவி தேவைப்படும் இடத்திற்குச் சென்று சிகிச்சை அளிப்பது மட்டுமல்லாமல், அங்கு நடக்கும் போர்க்குற்றங்கள் அல்லது மனித உரிமை மீறல்களை உலகிற்கு உரக்கச் சொல்வது. “மருத்துவம் உயிரைக் காப்பாற்றும் என்பது உறுதி அல்ல, ஆனால் மௌனம் நிச்சயம் கொல்லும்” என்பதே இவர்களின் தாரக மந்திரம்.

உயிரைப் பணயம் வைத்து ஒரு பணி

மனிதநேய உதவிகளை வழங்கினாலும், அரசியல் சூழல்கள் இவர்களுக்குச் சவாலாகவே உள்ளன. குறிப்பாக, அமெரிக்கா போன்ற நாடுகள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட இடங்களில், காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளித்த இவர்களை ‘எதிரிகளின் நண்பர்கள்’ எனத் தவறாகக் கருதி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இத்தகைய தாக்குதல்களில் இதுவரை இவ்வமைப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.

உலகளாவிய அங்கீகாரம்

பேரிடர் காலங்களில் உலகின் மிக வேகமான மற்றும் நேர்மையான உதவிக்குழுவாகப் பெயர் பெற்ற இந்த அமைப்பிற்கு, அதன் மனிதாபிமான சேவையைப் பாராட்டி 1999-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

முடிவுரை: நாடுகள் எல்லைகளைப் பிரித்தாலும், மனிதாபிமானத்திற்கு எல்லைகள் இல்லை என்பதை அரை நூற்றாண்டிற்கும் மேலாக நிரூபித்து வருகிறது MSF அமைப்பு. இன்று இவர்கள் பயன்படுத்தும் ஆண்டு நிதி மட்டும் ரூ.12,000 கோடிக்கும் அதிகம். அதிகாரத்திற்கு அஞ்சாமல், உயிர்காக்கும் பணியைத் தொடரும் இந்த மருத்துவர்கள், உலகின் உண்மையான போர்வீரர்கள்

Related Posts