இந்தியாவில் மனித உரிமைமீறல்கள் – அமெரிக்கா அறிக்கை!
நம் நாட்டில் மனித உரிமைகளின் நிலைபற்றி ஆய்வுக்கு உட்படுத்துகையில், அது மிகவும் மோசமானதாகவே உள்ளது எனலாம். மனித உரிமை மீறல்கள் கட்டுப்படுத்தப்படவில்லை என்பதுதான் கண்கூடு. `ஒரு நாடு மனித உரிமையை மதிக்கிறது’ என்று கருதுவதற்கு அடிப்படையே, அரசாங்கத்தின் தவறுகளை எவ்வித அச்சமுமின்றி, எந்தவொரு தனிமனிதரும் சுட்டிக் காட்டும் சூழல் இருப்பதுதான். இந்தியாவில் அப்படிபட்ட சூழல் இன்றுவரை சாத்தியப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். இந்தச் சுதந்திரம் தனி மனிதருக்கு மட்டும் அல்ல. ஊடகவியலாளர்களுக்கும் வழங்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனம்.
இச்சூழலில் அமெரிக்காவின் வெளிவிவகார துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சார்பில், உலக நாடுகளின் மனித உரிமை மீறல் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த ஆண்டறிக்கையில், ‘ரஷ்யா, சீனா, ஈரான், வட கொரியா, மியான்மர் போன்ற நாடுகளில் பெரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன. இந்தியாவை பொருத்தமட்டில் 2022ம் ஆண்டில் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், பத்திரிகை சுதந்திரம், மத மற்றும் இன சிறுபான்மையினரை குறிவைக்கும் வன்முறை உள்ளிட்ட மனித உரிமை மீறல் வழக்குகள் பதிவாகியுள்ளன.
மேலும் அரசியல் தடுப்புக்காவல், தன்னிச்சையான கைதுகள் அல்லது தடுப்புக்காவல்கள், ஊடகத்தின் மீதான கட்டுப்பாடுகள், ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை உள்ளிட்ட மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடந்துள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு துறை சார்பில் ஏற்கனவே இதுபோன்ற மனித உரிமை மீறல் தொடர்பான அறிக்கைகள் வெளியான போது, அதனை இந்திய அரசு மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.