இபாஸ் எப்படி விண்ணப்பிப்பது என்று கேட்போருக்கான முழுமையான தகவலிது!
![இபாஸ் எப்படி விண்ணப்பிப்பது என்று கேட்போருக்கான முழுமையான தகவலிது!](https://www.aanthaireporter.in/wp-content/uploads/2021/04/tn-e-pass-apr-10a.jpg)
கன்னாபின்னாவென பரவி வரும் கொரோனா அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசு அறிவித்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலாகி உள்ளது. மனம் நொந்து போய் புலம்ப வழி செய்யும் வழிபாட்டு தலங்களில் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். திருவிழா உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் பிற மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க தடை திக்கப்பட்டு உள்ளது.வெளிமாநிலங்கள் அல்லது வெளிநாடுகளில் இருந்து வருவோர் இபாஸ் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறியது:–
வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து வருவோர் தங்களது அனைத்து விவரங்களையும் தமிழக அரசின் பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதில், தனிநபர் வாகனம், ரெயில், விமானம் மூலமாக வருவோருக்கென தனித்தனியாகப் பக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழகம் வருவதற்கான பிரத்யேக காரணம், தமிழகத்தில் பயணம் செய்யும் இடம், விண்ணப்பதாரர் பெயர், பாலினம், உடன் பயணிப்போரின் எண்ணிக்கை ஆகிய விவரங்களைப் பதிவிட வேண்டும்.
மேலும், விண்ணப்பதாரர் தனது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாகன ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண், கடவுச் சீட்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும். தனிநபர் வாகனமாக இருந்தால் வாகனத்தின் எண்ணைக் குறிப்பிட வேண்டும்.
ரெயில், விமானம் மூலம் பயணிப்பவராக இருந்தால், பயணச் சீட்டின் நகலைப் பதிவேற்றம் செய்வதுடன், அதனுடைய எண், ரெயில் அல்லது விமானத்தின் எண், ரெயில் பெட்டியின் எண், இருக்கையின் எண் ஆகிய விவரங்களை இணையதளத்தில் அதற்கான உரிய இடத்தில் தெரிவிக்க வேண்டும். இந்த விவரங்களைப் பதிவு செய்த பிறகு அதற்கான அனுமதிக்காகக் காத்திருக்கத் தேவையில்லை. விவரங்கள் அனைத்தையும் பதிவு செய்த பிறகு வெளி மாநிலங்கள், வெளி நாடுகளைச் சோ்ந்த பயணிகள் தங்களது பயணத்தைத் தொடங்கலாம்.
இணைய வழியிலான பதிவு முறையில் இருந்து தமிழகத்துக்கு அருகிலுள்ள மூன்று மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. ஆந்திரம், கா்நாடகம், புதுவை ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோர் இ–பாஸ் முறையைப் பின்பற்றத் தேவையில்லை. அவர்கள் தங்களது மாநிலங்களில் இருந்து புறப்பட்டு வழக்கம் போல் தமிழகம் வந்து சேரலாம்
இந்த சூழலில் இபாஸ் எப்படி விண்ணப்பிப்பது என்று கேட்போருக்கான தகவலிது:
*இ-பாஸ் விண்ணப்பிக்க https://eregister.tnega.org/ என்ற இணையதளத்தை அணுகலாம்.
*இந்த இணையத்தில் சென்றால், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருகிறீர்களா? அல்லது வெளிநாட்டில் இருந்து தமிழகம் வருகிறீர்களா? என்ற கேள்வி இடம்பெற்றிருக்கும்.
*அதில் உங்கள் தேர்வை கிளிக் செய்தால் உங்கள் செல்போன் எண் கேட்கும். பிறகு அந்த நம்பருக்கு OTP வரும். அதை பதிவு செயுங்கள்.
*பின்னர் பயணிகளின் பெயர், வயது, எங்கிருந்து வருகிறீர்கள், செல்லும் இடம், காரணம் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட வேண்டும்.
இதை பூர்த்தி செய்த உடன் உங்கள் செல்போனுக்கு இ-பாஸ் வந்துவிடும்.
குறிப்பாக நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்லும் போது கூட இ-பாஸ் வைத்திருப்பது கட்டாயம்.