32°C

சியோல் கனவு… மாயக் கவர்ச்சி… ஆபத்தான பாதையில் இந்தியப் பெண் குழந்தைகள்!

admin Published: July 27, 2026 3 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து:

மீபகாலமாக இந்தியச் சிறுவர்களிடையேயும், குறிப்பாகப் பருவமடைவதற்கு முந்தைய இளம் சிறுமிகளிடையேயும் தென்கொரியாவின் ‘கே-பாப்’ (K-Pop) இசை மற்றும் ‘கே-டிராமா’ (K-Drama) கலாச்சாரம் மிகப்பெரிய தாக்கம் செலுத்தி வருகிறது. வெறுமனே இசையை ரசிப்பதோடு நிற்காமல், தென் கொரியாவிற்குச் சென்று ‘கே-பாப் ஐடால்’ (K-Pop Idol) ஆக வேண்டும் என்ற அதீத மோகத்தால், வீட்டை விட்டு வெளியேறி எல்லைகளைக் கடக்க முயலும் ஆபத்தான சம்பவங்கள் இந்தியெங்கிலும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தி வருகின்றன.

மேற்கு வங்கத்தின் எல்லைக் கிராமத்திலிருந்து தமிழகத்தின் கரூர் வரை, எவ்விதத் திட்டமிடலும் இன்றி, பாக்கெட்டில் வெறும் சில நூறு ரூபாய்களுடன் தென்கொரியாவின் சியோல் நகரை நோக்கிப் புறப்படும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களையும் மனநல நிபுணர்களையும் கவலையடையச் செய்துள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

வெறும் ₹70 பணத்துடன் சியோல் பயணம்: மால்தா சிறுமிகளின் அதிர்ச்சி சம்பவம்

மேற்கு வங்க மாநிலம் மால்தா பகுதியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமிகள் இருவர், வழக்கம் போல் பள்ளிக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டுப் புறப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களின் பள்ளிப் பைகளில் புத்தகங்களுக்குப் பதிலாக ஆடைகள் மட்டுமே இருந்தன. கையில் இருந்தது வெறும் 70 ரூபாய் பணம்!

இணையதளங்களில் வரும் போலியான ‘ஆன்லைன் ஆடீஷன்’ (Online Auditions) விளம்பரங்களை நம்பி, தென்கொரியாவின் சியோல் நகருக்குச் சென்று கே-பாப் நட்சத்திரங்களாக மாறலாம் என இவர்கள் திட்டம் தீட்டியுள்ளனர். வடகிழக்கு மாநிலங்கள் வழியாக எல்லை தாண்டிவிடலாம் என நினைத்து, இந்திய-பூடான் எல்லையான ஜெய்கான் பகுதி வரை பயணித்த இந்த சிறுமிகள், அதிர்ஷ்டவசமாக எல்லை பாதுகாப்புப் படையினராலும் காவல்துறையினராலும் மீட்புக் குழுவினராலும் மீட்கப்பட்டனர்.

கரூர் முதல் கொல்கத்தா வரை: இந்தியா முழுதும் பரவும் ‘கே-வேவ்’ மாயை

இந்த விபரீத மோகம் ஏதோ ஒரு பகுதியில் மட்டும் நடக்கும் ஒற்றைச் சம்பவம் அல்ல. இந்திய அளவிலான பல நிகழ்வுகள் இதன் தீவிரத்தை உணர்த்துகின்றன:

  • கரூரின் கப்பல் கனவு: தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமிகள் மூவர், தங்களுடைய சேமிப்பு உண்டியல்களை உடைத்து ₹14,000 பணத்தைச் சேர்த்துள்ளனர். விசாகப்பட்டினம் துறைமுகத்திற்குச் சென்றால் அங்கிருந்து கப்பல் மூலம் தென்கொரியாவிற்குச் சென்றுவிடலாம் என்ற தவறான நம்பிக்கையில் வீட்டை விட்டு வெளியேறி, விசாகப்பட்டினத்தில் மீட்கப்பட்டனர்.

  • மஹாராஷ்டிராவின் கடத்தல் நாடகம்: தாராசிவ் பகுதியைச் சேர்ந்த 11 முதல் 13 வயதுடைய மூன்று சிறுமிகள், சியோல் செல்வதற்காகப் புனே செல்லும் பேருந்தில் ஏறியுள்ளனர். பெற்றோரின் தேடலைத் திசைதிருப்பத் தாங்கள் கடத்தப்பட்டதாகக் கூறி நாடகமாடியதும் விசாரணையில் அம்பலமானது.

  • பிடிஎஸ் கச்சேரிக்காக டெல்லி பயணம்: கொல்கத்தாவைச் சேர்ந்த நான்கு பள்ளிச் சிறுமிகள், பிரபலாமான ‘பிடிஎஸ்’ (BTS) இசைக் குழுவின் நேரடி கச்சேரியைக் காண்பதற்காகத் தென்கொரியாவிற்குச் செல்லத் திட்டமிட்டு, கையில் இருந்த பணம் தீருவதற்குள் டெல்லி வரை பயணித்துக் கண்டறியப்பட்டனர்.

இணைய உலகின் மாய வலை மற்றும் போலி ஆடீஷன்கள்

சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம், யூடியூப் ஷாா்ட்ஸ் மற்றும் டெலிகிராம் குழுக்களில் “தென்கொரியாவில் இலவசப் பயிற்சி, தங்குமிடம், கே-பாப் நட்சத்திரமாகும் வாய்ப்பு” என்ற பெயரில் ஏராளமான போலி விளம்பரங்கள் உலா வருகின்றன.

அறியாப்பருவத்தில் இருக்கும் சிறுமிகள், இந்த விளம்பரங்களின் பின்னணியில் இருக்கும் ஆபத்துகளைப் புரிந்து கொள்ளாமல், தங்களின் சுய விவரங்களையும் புகைப்படங்களையும் பகிர்ந்து ஏமாறுகின்றனர். சில நேரங்களில், இந்த ஆசையைப் பயன்படுத்தி மனித கடத்தல் கும்பல்களும், சைபர் குற்றவாளிகளும் சிறுமிகளை இலக்கு வைக்கும் அபாயமும் நிலவுகிறது.

பெற்றோர்களும் சமூகமும் கவனிக்க வேண்டிய எச்சரிக்கை மணிகள்

திரை உலகமும் இசை உலகமும் காட்டும் பளபளப்பான மாய உலகை உண்மை என நம்பும் மனநிலையில் Gen-Z மற்றும் வளரிளம் பருவத்தினர் உள்ளனர். குழந்தைகள் தங்களின் பெரும்பாலான நேரத்தைச் செல்போன்களில் எதற்காகச் செலவிடுகிறார்கள், எந்த மாதிரியான கலாச்சார உள்ளடக்கங்களைப் (Content) பார்க்கிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது.

குழந்தைகளின் கலை ஆர்வத்தைத் தவறாக எண்ண வேண்டியதில்லை; ஆனால், நிஜ உலகிற்கும் கற்பனை உலகிற்கும் இடையிலான வேறுபாட்டை அவர்களுக்குப் புரியவைப்பதும், இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் அவசர தேவையாக மாறியுள்ளது.