பள்ளி பருவத்திலே படம் எப்போ ரிலீஸ்? – இயக்குநர் பதில்!
வி.கே.பி.டி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக D.வேலு தயாரிக்கும் படம் . ‘பள்ளிப் பருவத்திலே’. வாசு தேவ பாஸ்கர் இயக்கிய இந்தப் படத்தில் பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக வெண்பா நடிக்கிறார். இவர் ‘கற்றது தமிழ்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். முக்கிய கதாபாத்திரங்களில் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி, ஆர்.கே. சுரேஷ் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமையா, கஞ்சா கருப்பு இருவரும் கலகலப்பான காமெடி வேடத்தில் நடிக்கிறார்கள். பொன்வண்ணன், பேராசிரியர் ஞானசம்பந்தம், பருத்திவீரன் சுஜாதா, வேல்முருகன், பூவிதா, E.ராம்தாஸ், புவனா, வைஷாலி, காதல் சிவகுமார் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இந்த படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது, “ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மறக்க முடியாதது பள்ளி பருவமா? கல்லூரி பருவமா? என்று கேட்டால் எல்லோரின் பதிலும் பள்ளி பருவம் என்பதாகத்தான் இருக்கும். கல்லூரி பருவத்தில் நம் மனசு இறுகி போய் விடும். அப்போது நடந்தவை அத்தனைக்கும் வேறு ஏதோ காரணம் இருக்கும். ஆனால் பள்ளி பருவம் என்பது பால் மனம் மாறாத பல சம்பவங்களின் பின்னணியில் இன்றுமே இருக்காதுதான். ஆனால் அப்போது நடந்தவைகளை இன்றைக்கும் நினைக்கும் போது மனசே குதூகலம் அடையும்.. இது ..உண்மையா? இல்லையா? அதிலும் நமக்கு இன்றளவும் நெருக்கமாக தொடரும் பள்ளி நண்பர்கள் பழைய விஷயங்களை சொல்லும் போது எத்தனை மகிழ்சியாய் சொவார்கள் என்பதை கவனித்திருக்கிறீர்களா? அப்படியான பள்ளி மாணவர்களையும் சில குடும்ப சூழ்நிலைகளையும் மையப்படுத்தி அமைக்கப் பட்ட காமெடி கலந்த, காதல் கதை தான் ‘பள்ளிப் பருவத்திலே’.
நான் முன்னரே சொன்னது போல் இது என் நட்பு வட்டாரத்தில் நடந்த உண்மை நிகழ்ச்சியின் தொகுப்பு என்றாலும் நீங்கள் படம் பார்க்கும் போது உங்கள் வாழ்க்கையிலும் இதே நிகழ்ச்சி நடந்ததாக உணர்வீர்கள். அது போல் பர்பக்கெட்டான திரைக்கதை உருவாக்கி இருக்கிறோம் . நாயகனாக நந்தன் ராமும் நாயகியாக வெண்பாவும் நடிக்கிறார்கள். இவர் ‘கற்றது தமிழ்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். இவர்களைத் தவிர முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்.கே. சுரேஷ், பொன்வண்ணன், கே.எஸ். ரவிகுமார், தம்பி ராமைய்யா, ஊர்வசி, பேராசிரியர் ஞானசம்மந்தம், பருத்திவீரன் சுஜாதா, வேல்முருகன், காதல் சிவகுமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அறிமுக நட்சத்திரங்கள் இருவருமே மிக இயல்பாக, யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். மற்றவர்களைப் பற்றிக் கேட்க வேண்டுமா.. மிகச் சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
இன்னொரு விஷயம் சொல்ல வேண்டும் -சினிமா மேல் எனக்கு இருந்த காதலால் நான் உதவி இயக்குனராக வேலை செய்ய கே.எஸ்ரவிகுமார், சுரேஷ் கிருஷ்ணா அவர்களிடம் சேர வேண்டும் என்று பல முறை முயற்சித்தும் முடியாமல் போனது.ஆனால் நான் தயாரித்த ‘வேதா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் மூலம் எனக்கு அறிமுகம் கிடைத்தது. நான் யாரிடம் உதவியாளராக சேர வேண்டும் என்று நினைத்தேனோ அதே கே.எஸ்.ரவிகுமார் சாரை எனது இயக்கத்தில் இந்தப் படத்தில் நடிக்க வைத்தது எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். அவரிடம் நான் கதை சொன்னதும், முழுக் கதையையும் கேட்டு விட்டு, இது என்ன விருதுக்காக எடுக்கிற படமா என்று கேட்டார். இதே வார்த்தையைத்தான் கவிப்பேரரசு வைரமுத்துவும் என்னிடம் சொன்னார் என்று கே.எஸ்.ரவிகுமார் சாரிடம் கூறினேன். அதற்கு அவர் மிகவும் சந்தோஷப்பட்டார். அவர்கள் இருவரும் சொன்னதே எனக்கு தேசிய விருது கிடைத்த சந்தோஷம்,” என்கிறார் இயக்குனர் வாசுதேவ் பாஸ்கர்.
மேலும் ”’இப்போதைய பெரிய படங்களுக்கான தொலைக்காட்சி உரிமையை விற்பதே பெரிய குதிரைக்கொம்பாக இருக்கும்போது, இந்தப் படத்தை சன் நிறுவனம் வாங்கும் அளவுக்கு அப்படி என்ன இருக்கிறது?’ அப்படீன்னு நிறைய பேர் கேக்கறாங்க.. இதுக்கான கதை, திரைக்கதை, அதற்குப் பொருத்தமான நடிகர்கள் ஆகிய மூன்றையும் நம்பிதான் களமிறங்கினோம். இந்த கதையைக் கேள்விப் பட்டதும் சன் டிவி ஆர்வம் காட்டினார்கள். அதன் பிறகு நாயகன், நாயகி தவிர்த்த மற்ற முக்கிய நட்சத்திரங்களின் பட்டியலைப் பார்த்தார்கள். அவர்களுக்குப் பிடித்து விட்டது. உடனடியாக படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிக்கொண்டார்கள். அம்புட்டுத்தான்” என்ம் தெரிவித்தார்..ரிலீஸூக்கு தயாராக இருக்கும் பள்ளி பருவத்திலே படம் திரைப்பட தயாரிப்பாளர்கள் வித்தித்துள்ள சில தடைகள் நீங்கியதும் உடனடியாக வெளியாகும் என்றும் தெரிவித்தார்