குரான் எரிப்பு போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர டென்மார்க் அதிரடி!

சர்வதேச அளவில் மகிழ்ச்சியான நாடு என்று சொல்லப்படு வரும் டென்மார்க் மற்றும் ஸ்வீடன் நாடுகளில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் பிரதிகளை பொதுவெளியில் எரிக்கும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டங்கள் உள்நாட்டில் மட்டுமன்றி, நாட்டுக்கு வெளியேயும் பதற்றத்தை உருவாக்கி வருகிறது. குரான் எரிப்பு போராட்டங்கள் காரணமாக டென்மார்க், ஸ்விஸ் உள்ளிட்ட நோர்டிக் தேசங்களின் தூதரகங்கள் அடிப்படைவாதிகளின் பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு ஆளாயின. குறிப்பிட்ட நாடுகளில் வசிக்கும் மற்றும் பயணம் செய்யும் தங்கள் குடிமக்களை கவனமாக இருக்கும்படி, இந்த நோர்டிக் நாடுகள் வலியுறுத்த வேண்டியதாயிற்று.
இவற்றுக்கு அப்பால், இஸ்லாமிய நாடுகளின் சீற்றத்துக்கும் நோர்டிக் நாடுகள் ஆளாயின. இஸ்லாமிய நாடுகளுடனான இயல்பான உறவை குலைத்து பதற்றம் உருவாக்கும் அளவுக்கு எல்லை மீறின. எனவே, குரான் எரிப்பு போராட்டங்களை முடிவுக்கு கொண்டு டென்மார்க் தேசம் புதிய சட்ட மசோதாவைஅமல்படுத்த முடிவு செய்திருக்கிறது.
இது குறித்து ஆகஸ்ட் 25ம் தேதியன்று அறிவிப்பு வெளியிட்ட டென்மார்க் நீதித்துறை அமைச்சர் பீட்டர் ஹம்மெல்கார்ட், “மத சமூகத்துக்கு அத்தியாவசியமான மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்தவற்றை, பொருத்தமற்ற முறையில் கையாள்வதை தடைசெய்யும் சட்டம் கொண்டு வரப்பட இருக்கிறது. இதன் மூலம் குரான் மட்டுமன்றி பைபிள் மற்றும் தோரா என எந்த மதத்தின் புனித நூல்களின் பிரதிகளையும் பொதுவில் எரிப்பது அல்லது சேதத்துக்கு ஆளாக்குவது தண்டனைக்குரிய குற்றமாகிறது” என்று விளக்கி உள்ளார்.
குரான் எரிப்பு போராட்டங்களை நேரடியாக முடிவுக்கு கொண்டுவர முடியாத நிலையில், தற்போது சட்ட மசோதா மூலம் அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயல்கிறது டென்மார்க் தேசம் என்பது குறிப்பிடத்தக்கது.