ஜெர்மனியில் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி
ஜெர்மனி நாட்டின் முனிச் நகரிலுள்ள ஒலிம்பியா வணிக வளாகம் ஒன்றில் நேற்று புகுந்த மூன்று மர்ம நபர்கள் யாரும் எதிர்பாராத வகையில் அங்கிருந்த பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றதால், போலீசார் நகர் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையை மேற்கொண்டுள்ளனர்.
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதனிடையே தாக்குதல் நிகழ்ந்த இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மர்மநபரின் சடலத்தை கைப்பற்றியுள்ள போலீசார், அவர் துப்பாக்கி சூடுநடத்திய நபராக இருக்கலாம் என்று சந்தேகித்துள்ளனர்.
மேலும் தாக்குதல் நடத்திய நபர் ஜெமன்-ஈரானியத்தை சேர்ந்த 18 வயது வாலிபர் என தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கடந்த எட்டு நாட்களுக்குள் பொதுமக்கள் மீது நடத்திய மூன்றாவது மிகப்பெரிய தாக்குதலாக கருதப்படுகிறது.
ஜெர்மனி நாட்டில், கடந்த வாரத்தில், ரயில் பயணிகளை கோடரியால் தாக்கிய பயங்கரவாதியை போலீசார் சுட்டுக்கொன்றனர். இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் தீவிரவாத அமைப்பினர் இந்த தாக்குதலை தாங்கள் நடத்தியதாக அறிவித்து இருந்தனர்.
இந்த அதிர்ச்சியில் இருந்து அந்நாட்டினர் மீள்வதற்குள் நேற்று, நிகழ்ந்த துப்பாக்கி சூட்டையும் ஐஎஸ் ஆதரவு தீவிரவாதிகளே மேற்கொண்டு இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.