கொரோனா – இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆட்டம் இருக்குது – உலக சுகாதர அமைப்பு வார்னிங்!
![கொரோனா – இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆட்டம் இருக்குது – உலக சுகாதர அமைப்பு வார்னிங்!](https://www.aanthaireporter.in/wp-content/uploads/2020/05/co-may-27a.jpg)
உலக ஜனங்கள் சகலரையும் முடக்கி போட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுக்க 56 லட்சத்து 84ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3லட்சத்து 52 ஆயிரத்து 225 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் இந்த தொற்று மீண்டும் உச்சத்தை அடைய வாய்ப்புள்ள தாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் நெருக்கடி கால நடவடிக்கைகளுக்கான தலைவர் மைக் ரயான், “கொரோனா வைரஸின் முதல்கட்ட தாக்குதலுக்கு மத்தியில்தான் இன்னும் உலகம் உள்ளது. பல நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வரும் வேளையில், மத்திய மற்றும் தென் அமெரிக்கா, தெற்காசியா, ஆப்பிரிக்காவில் நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது.
கடல் அலைகள் ஒன்றை பின் தொடர்ந்து மற்றொன்று வருவது போல தொற்று நோய்களும் பெரும்பாலும் மறு தாக்குதல் நடத்துவது வழக்கம். இதன்படி, முதல் நோய்த்தொற்று அலை தணிந்த இடங்களில் இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் இரண்டாவது அலை வரக்கூடும். முதல் அலைக்கு எதிரான நடவடிக்கைகளை நாம் மிக விரைவில் நீக்கிவிட்டால், இரண்டாவது அலையில் தொற்று விகிதம் மீண்டும் மிக விரைவாக உயரும் வாய்ப்புள்ளது.
இரண்டாவது நோய்த்தொற்று அலை என்பது, முதல் அலை முற்றிலும் மறையாமல் இருந்து, அதுவே சில மாதங்களில் இரண்டாவது அலையாக வரக்கூடும். பல நாடுகளில் ஓரிரு மாதங்களில் இதுபோல் நிகழ வாய்ப்புள்ளது. எனவே, எந்த நேரத்திலும் இந்த நோய்த் தொற்று அதிகரிக்கலாம் என்ற உண்மையையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
முதல் அலை தணிந்து கொண்டே வருவதால் இரண்டாவது அலைக்கு பல மாத அவகாசம் இருப்பதாக நாம் கருதிவிடக் கூடாது. இந்த அலையிலேயே மீண்டும் உச்சநிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள நாடுகள் பொது சுகாதாரம், சமூக நடவடிக்கைகள், கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை தொடர வேண்டும். உடனடி 2வது உச்ச நிலையை தவிர்க்க விரிவான உத்திகளை மேற்கொள்ள வேண்டும்.
https://www.facebook.com/WHO/videos/908766279637884