சர்ச்சில் புகைத்த பாதி சுருட்டு.. ஏலத்துக்கு வருது!

சர்ச்சில் புகைத்த பாதி சுருட்டு.. ஏலத்துக்கு வருது!

ரண்டாம் உலகப் போர் நடந்த காலத்தில் நாயகர்களாக விளங்கியவர்களில் ஒருவர் சர்ச்சில். இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்தவர். 1940 – 1945 மற்றும் 1951 – 1955 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை பிரிட்டனின் பிரதமராக இருந்தவர் வின்ஸ்டன் சர்ச்சில். 1965ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தன்னுடைய 90 வயதில் இறந்த சர்ச்சிலுக்கு, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. அவர் சுருட்டு பிடிக்கும் பழக்கம் உள்ளவர். கியூபா நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோமியோ ஜூலியட்ஸ் பிரமிட்ஸ் என்ற பிராண்டு சுரட்டைதான் அவர் புகைப்பார். அந்த வகையில், அவர் 79 ஆண்டுகளுக்கு முன்பு புகைப்பிடித்த பாதி சுருட்டு ஒன்று அடுத்த மாதம் ஏலம் விடப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து இங்கிலாந்து ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”1944இல் மொராக்கோவின் ரபாத்தில் உள்ள தூதரக ஜெனரலாக இருந்த ஹக் ஸ்டோன்ஹெவர் பேர்ட் என்பவருக்கு, பிரிட்டனின் போர்க்கால பிரதமராக இருந்த சர்ச்சில் தாம் பிடித்த பாதி சுருட்டு ஒன்றைப் பரிசாக வழங்கியதாகவும், அதை ஹெவர் பேர்ட்டின் குடும்பத்தினர்கள் தற்போது ஏலம்விட இருக்கிறார்கள்” எனவும் அது தெரிவித்துள்ளது.

சுருட்டு ஏலம் தொடர்பாக ஹக் ஸ்டோன்ஹெவர் பேர்டின் குடும்பத்தினர், ”சர்ச்சில், தாம் பாதி புகைப் பிடித்த சுருட்டை, பேர்டிடம் கொடுத்துள்ளார். அதை, அவர் 1973ஆம் ஆண்டு இறக்கும்வரை பொக்கிஷமாக வைத்திருந்தார். தற்போதும் அது கண்ணாடிக் குடுவைக்குள் பொக்கிஷமாய் உள்ளது. தற்போது நாங்கள் அதைக் கண்டுபிடித்துள்ளோம். இதனால் அதை விற்க வேண்டிய நேரம் வந்துள்ளது. வரும் ஜூன் 16ஆம் தேதி டெர்பிஷையரைச் சேர்ந்த ஹான்சன்ஸ் ஏலதாரர் நிறுவனத்தால் இந்த நினைவுப் பொருள் ஏலம் விடப்பட இருக்கிறது. இதனால், 900 பவுண்டுகள் (ரூ. 92,078) கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள், “எங்களது முன்னோர் சிறந்த சர்ச்சில் ரசிகர்களாக இருந்தனர். அவர்கள் சர் வின்ஸ்டன் புகைப்படம் மற்றும் நகைச்சுவையான உருவத்துடன் சுருட்டை காட்சிக்கு வைத்திருந்தனர். அதைத்தான் தற்போது ஏலம்விட இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

Related Posts

error: Content is protected !!