சென்னை சங்கமம் -தொடங்கியாச்சு -முழு விபரம்!

சென்னை சங்கமம் -தொடங்கியாச்சு -முழு விபரம்!

மிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளையொட்டி, தமிழ் மண்ணின் கலைகளைக் களிப்போடு கொண்டாடும் வகையில் சென்னை மாநகரில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளுடன் ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.இந்த ஆண்டுக்கான ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’வின் கலைநிகழ்ச்சிகள் தொடக்க விழா கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி ஆலயத் திடல் விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவைத் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து தமிழகத்தின் புகழ்பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து மாபெரும் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை நடத்தினர். சென்னையில் 18 இடங்களில் இன்றுமுதல் (ஜன.14) 17-ம் தேதி வரை மாலை 6.00 முதல் இரவு 9.00 மணி வரை சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ள 1,500-க்கும் மேற்பட்ட கலைஞர்களால் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம், துடும்பாட்டம், பம்பையாட்டம், கைச்சிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சேவையாட்டம், கோலாட்டம், ஜிக்காட்டம், ஜிம்பளா மேளம், பழங்குடியினர் நடனம், மல்லர் கம்பம், வில்லுப்பாட்டு, கணியன் கூத்து, தெருக்கூத்து, பாவைக்கூத்து, தோல்பாவைக்கூத்து, நாடகம், கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ ‘சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சிகள், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, ராஜா அண்ணாமலைபுரம், அரசு இசைக் கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல், கிண்டி கத்திபாரா சந்திப்பு, ஜாபர்கான்பேட்டை மாநகராட்சி விளையாட்டுத் திடல், தியாகராயநகர் நடேசன் பூங்கா, நுங்கம்பாக்கம் மாநகராட்சி விளையாட்டுத் திடல், எழும்பூர் அரசு அருங்காட்சியகம், கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத்திடல், ராயபுரம் ராபின்சன் பூங்கா, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் கோபுரப் பூங்கா. கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா, கே.கே.நகர் சிவன் பூங்கா, வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், அம்பத்தூர் எஸ்.வி. விளையாட்டுத் திடல் ஆகிய 18 இடங்களில் 14.1.2025 முதல் 17.1.2025 வரை நான்கு நாட்கள் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறவுள்ளன.

உணவுத் திருவிழா

சென்னை சங்கமம் விழா நடைபெறும் இடங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் விரும்பி உண்ணும் பல உணவு வகைகளைக் கொண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உணவுத்திருவிழாவும் நடைபெறவுள்ளது.

சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியைத் தொடர்ந்து கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, காஞ்சிபரம் மற்றும் வேலூர் ஆகிய எட்டு நகரங்களிலும் இந்த ஆண்டு ”சங்கமம் – நம்ம ஊரு திருவிழா” கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன” என தமிழக அரசு அறிவித்துள்ளது.

error: Content is protected !!