தோனியாக நடித்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை!

தோனியாக நடித்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை!

நம்மூர் சிவகார்த்திகேயன் பாணியில் பாலிவுட் நடிகர்களில் டி.வியிலிருந்து பெரிய திரையில் சாதித்த மிகச்சிலரில் முக்கியமானவர் சுஷாந்த். 2012ல் வெளியான `Kai Po Che’ படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான சுஷாந்த், அடுத்தடுத்த படங்கள் மூலம் கவனம் ஈர்த்தார். பிகே மற்றும் கேதர்நாத் உள்ளிட்ட படங்கள் அவரது திரை வாழ்க்கையின் முக்கியமான படங்கள். தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.

2019ல் ஷ்ரத்தா கபூரூடன் இணைந்து சுஷாந்த் நடித்திருந்த ‘Chhichhore’படம் வணிகரீதியில் மட்டுமல்லாது விமர்சனரீதியிலும் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக்கொடுத்தது. முகேஷ் சாப்ரா இயக்கத்தில் சஞ்சனாவுடன் இவர் நடித்துள்ள ‘Dil Bechara’படம் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் முடிந்து ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் ஹாலிவுட் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காக அந்தப் படம் தயாராகியிருக்கிறது. கொரோனா வைரஸ் பிரச்னையால், அந்தப் படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸாக இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இதனிடையே தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து , கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவர், அதற்காக மருத்துவரிடம் தொடந்து சிகிச்சை எடுத்து வந்த நிலையில் இன்று மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். வளர்ந்து வரும் இளம் நடிகரான இவர, தற்கொலை செய்து கொண்டது திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரையுலக, விளையாட்டு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, ‘ ‘சுஷாந்த் சிங் ராஜ்புத், ஒரு சிறந்த இளம் நடிகர் நம்மை விட்டு பிரிந்து விட்டார். திரையுலகில் அவரது உயர்வு பலருக்கு உத்வேகம் அளித்தது. அவர் மறக்கமுடியாத பல தருணங்களை விட்டுச் சென்றுள்ளார். அவரது மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்’ என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!