ப்ளைட் டிக்கெட் ரேட் எகிறப் போகுதுங்கோ!

ப்ளைட் டிக்கெட் ரேட் எகிறப் போகுதுங்கோ!

விமான எரிபொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் விமான டிக்கெட் கட்டணங்கள் விலை உயருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 3வது அலையின் தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. இதனால் நாடுகளுக்கு இடையிலான விமான போக்குவரத்து சேவை மீண்டும் முழுவீச்சில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் – ரஷ்ய போர் காரணமாக கச்சா எண்ணை விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக விமானங்களில் பயன்படுத்தப்படும் ஏ.டி.எப். எனும் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது.

விமான எரிபொருளின் விலை நேற்று 18 சதவீதம் உயர்ந்துள்ளது. ஏ.டி.எப். விலை கிலோ லிட்டருக்கு ரூ.17,135.63 (18.3 சதவீதம்) அதிகரிக்கப்பட்டு ரூ.1,10,666.29 ஆக உயர்ந்தது. நடப்பாண்டில் விமான எரிபொருளின் விலை அதிகரிக்கப்படுவது இது 6வது முறை ஆகும்.

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப விமான எரிபொருட்களின் விலை ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 16ந் தேதிகளில் மாற்றி அமைக்கப்படுகிறது. கடந்த வாரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பீப்பாய் 140 டாலராக அதிகரித்தது.

இதனைக் கருத்தில் கொண்டு இந்த விலை உயர்வை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. விமான எரிபொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் விமான டிக்கெட் கட்டணங்கள் உயருகிறது. உள்நாட்டு கட்டணம், வெளிநாட்டு கட்டணங்களை மாற்றி அமைத்து விமான நிறுவனங்கள் கட்டண விவரங்களை வெளியிட உள்ளது. அதன்பிறகே விமானங்களின் கட்டணங்கள் எவ்வளவு உயர்ந்துள்ளது என்பது தெரியவரும்.

error: Content is protected !!