கடலில் மீன் பண்ணை அமைத்து ஆதாயம் தேட விருப்பமா?
மீனவர்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையில் கடலுக்குள் மீன் வளர்ப்புப் பண்ணை வைத்து வருவாய் ஈட்டும் புதிய திட்டத்தை தேசிய கடல்வளர் ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் செல்லாமல், கடற்கரையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவுக்குள் மீன் பிடிக்கலாம். இந்த கடல் மீன் பண்ணைகளின் மூலம் 3 மாதத்தில் இருந்து 8 மாதத்துக்குள் 10 டன் வரை மீன் உற்பத்தி செய்ய முடியும்.
கிளி மீன், பால கெண்டை, கொடுவா, கடல் விறால், பாறை உள்ளிட்ட மீன்களை கடல் பண்ணைகளில் உற்பத்தி செய்யலாம். இதன் மூலம் கணிசமான லாபம் ஈட்டலாம் என்று கடல்வளர் ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் “பொதுவாக மீனவர்களுக்கு நிரந்தர வருமானம் கிடைப்பதில்லை. ஆழ் கடலுக்குள் சென்றாலும் சில நாள்களில் அவர்களுக்கு போதிய அளவு மீன்கள் கிடைப்பதில்லை. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவே உள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு தேசிய கடல்வளர் ஆராய்ச்சி நிறுவனம் கடலுக்குள் மீன்வளர்ப்பு செய்யுமாறு மீனவர்களுக்கு வழிகாட்டி வருகிறது.
இதற்காக கடலுக்குள் 3 கிலோ மீட்டர் தொலைவில் மீன் பண்ணைகள் அமைக்கலாம். அதற்காக 9 மீட்டர் விட்டம் கொண்ட உயர் அடர்த்தியிலான பாலி எத்தனாலால் செய்யப்பட்ட கூண்டு அமைக்க வேண்டும். அதன் நடுவில் வலையை இணைக்க வேண்டும்.
கடலுக்குள் 8 மீட்டர் மூழ்கியிருக்கும் படி வலையைப் பொருத்த வேண்டும். அதன் பிறகு மீன் குஞ்சுகள் அல்லது மீன் முட்டைகளை அதில் வைத்து வளர்க்கலாம். மீன் உற்பத்தியை பெருக்க உணவாக புழுக்கள், பாசிகள் ஆகியவற்றை கொடுக்கலாம். கிளி மீன் வளர்ப்புக்குத் தேவைப்படும் காலம் 3 மாதங்களாகும்.
பால கெண்டை, கடல் விறால், கொடுவா, பாறை போன்ற மீன்களுக்கான வளர்ப்புக் காலம் 8 மாதங்களாகும். முறையாக பராமரித்தால் 8 முதல் 10 டன் வரை உற்பத்தி செய்ய முடியும்.
எவ்வளவு செலவு?: மீன் கூண்டு, வலைகளுக்கு ரூ.8 லட்சம் செலவாகும். தவிர, மீன் குஞ்சு மற்றும் பராமரிப்புக்கு ஆகும் செலவு ரூ.4 லட்சம் ஆகும். கடலுக்குள் உற்பத்தி செய்யப்படும் இந்த மீன்கள் ஒரு கிலோ ரூ.250-லிருந்து ரூ.300 வரை விற்கப்படுகின்றன.
8 மாதத்துக்குள் குறைந்தது ரூ.20 லட்சம் வரை வருமானம் வரும். இதில் மீனவர்களுக்கு லாபமாக ரூ.8 லட்சம் கிடைக்கும்.
இந்த மீன் வளர்ப்புத் திட்டத்தைப் பொருத்தவரை பொருளாதார ரீதியில் ஒரு மீனவர் மட்டும் அமைக்க முடியாது. 8 அல்லது 10 பேர் சேர்ந்து இத்திட்டத்தில் ஈடுபடலாம். இதற்கான கடன் உதவிக்கு நபார்டு வங்கி, மீன் வளர்ச்சித் துறையை அணுகலாம்.
முதல் சுற்று மீன் உற்பத்தியை எடுத்த பிறகு, அதே வலைகள் மற்றும் கூண்டுகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இரண்டாவது முறை மீன் வளர்ப்பில் அதிக லாபம் கிடைக்கும்.
எங்கெங்கு உள்ளது?: இந்த திட்டம் ராமேஸ்வரம், நெல்லூர் மற்றும் அந்தமான் தீவுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் ஓலைக்குடா பகுதியில் 4 பண்ணைகளும், நெல்லூõல் கொத்தன்சத்திரம் பகுதியில் 2 பண்ணைகளும், அந்தமான் தீவுகளில் 4 பண்ணைகளும் உள்ளன.
வழிகாட்டுதல் மற்றும் உதவிக்கு அணுக வேண்டிய முகவரி:
தேசிய கடல்வளர் ஆராய்ச்சி நிறுவனம் (என்.ஐ.ஓ.டி),
நாராயணபுரம், பள்ளிக்கரணை, சென்னை- 100. தொலைபேசி: 044-66783418.


