தன்னிச்சையாக போனஸ் அறிவிப்பதா? – முதல்வருக்கு ராமதாஸ் கண்டனம்!
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தீபாவளியை முன்னிட்டு அரசு போக்கு வரத்துக் கழகத் தொழிலாளர்கள், மின்வாரியத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவன ஊழியர் களுக்கும் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நிறுவன ஊழியர்களுக்கு வழக்கம் போல 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 10 சதவீதத்துக்கு பதிலாக 20 சதவீதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் சில நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதாகக் கூறி 8.33 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை மட்டுமே போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
போக்குவரத்துக் கழக தொழிற்சங்களுடன் பேச்சு நடத்தி தான் போனஸ் அளவை தீர்மானித்திருக்க வேண்டும். ஆனால், முதல்வர் தன்னிச்சையாக போனஸ் அறிவித்திருப்பது முறையல்ல. அனைத்து பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்து அனைத்து நிறுவன தொழிலாளர்களுக்கும் மத்திய அரசு நிர்ண யித்திருக்கும் புதிய போனஸ் கணக்கீட்டு உச்சவரம்பின் அடிப்படையில் 25 சதவீதம், அதாவது ரூ.21,000 போனஸ் வழங்க தமிழக அரசு முன் வர வேண்டும். போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2,540 கோடி நிலுவைத்தொகையை தீபாவளிக்கு முன்பாக வழங்க வேண்டும்”என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


