சித்தார்த் பன்னீரின் ‘மிஸ் மேல கிரஷ்’ பான் இந்திய வீடியோ ஆல்பம்!
நியோ கேஸ்டில் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் சத்யா கரிகாலன் தயாரிப்பில் இசையமைப்பாளர் அஸ்வமித்ரா இயக்கத்தில் புதுமுக குழந்தை நட்சத்திர நடிகர் சித்தார்த் பன்னீர் சொந்த குரலில் தமிழ், தெலுங்கு , மலையாளம் ,கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பாடி, நடனமாடியிருக்கும் மிஸ் மேல கிரஷ்'( Miss u Mela Crush u) எனும் வீடியோ ஆல்பம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கவிப்பேரரசு வைரமுத்து, இசையமைப்பாளர் தேவா, நடிகர்கள் செந்தில், தம்பி ராமையா, கருணாஸ், இளவரசு, ரோபோ சங்கர், பிக்பாஸ் முத்துகுமரன், இயக்குநர்கள் சற்குணம், இரா. சரவணன், போஸ் வெங்கட், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், காயத்ரி ரகுராம், மாஸ்டர் ராதிகா, சாண்டி மாஸ்டர், ராமர் ரவிக்குமார், திரு. கடம்பூர் ராஜா, திரு. ரத்தினம் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் கருப்பையா பன்னீர்செல்வம் வரவேற்றார்.

இயக்குநர் – இசையமைப்பாளர் அஸ்வமித்ரா பேசுகையில்,”மாஸ்டர் சித்தார்த்தை முதலில் வேறு ஒரு பாடலுக்காக தான் அணுகினேன். பெப்பியான அந்த பாடலை பாட மாட்டேன் என சொல்லி விட்டார். அதன் பிறகு ஒரு பாடலை உருவாக்கி கொண்டிருந்தபோது என் பின்னால் நின்று கொண்டு ஒரு பாடலை ‘ஹம்’ செய்தான். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உடனடியாக பாடுகிறாயா? என கேட்டேன். சொல்லிக் கொடுத்தால் பாடுவேன் என்றான் நம்பிக்கையுடன். அதன் பிறகு தான் இந்த பாடலை உருவாக்கினோம். சித்தார்த் திறமைசாலி. எதை சொல்லிக் கொடுத்தாலும் அதனை உடனடியாக கற்றுக் கொண்டு விடுவான். அதனால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளிலும் அவரே இந்த பாடலை பாடியிருக்கிறார்.இந்த வீடியோ ஆல்பத்தை தொடர்ந்து மூன்று பாடல்களை உருவாக்கி வைத்திருக்கிறோம். அதில் சிலம்பம் தொடர்பான பாடலும் உண்டு. சிலம்ப வித்தையில் மாஸ்டர் சித்தார்த் நேஷனல் சாம்பியன். அவர் சிலம்பத்தில் தேசிய விருதினை வென்றவுடன் அது தொடர்பான பாடலையும் உருவாக்கி இருக்கிறோம். அந்தப் பாடலும் விரைவில் வெளியாகும். இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்களுக்கும், இந்த வீடியோ ஆல்பத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இயக்குநர் – நடிகர் தம்பி ராமையா பேசுகையில்,”எம் மண்ணின் மைந்தன் சித்தார்த்திற்கு வாழ்த்துகள். புதுக்கோட்டை என்பது கலைக்கு மட்டுமல்ல அரசியலுக்கும் சிறந்த மண். தமிழ் திரை உலகத்திற்கு இரண்டு சூப்பர் ஸ்டார்களை கொடுத்தது இந்த மண். இந்நிகழ்வில் நான் தாய் மாமன் எனும் உறவினையும், அதன் மேன்மையையும் காண்கிறேன். சத்யா கரிகாலன் ஆகிய சகோதர சகோதரிகளை பார்த்து வியக்கிறேன். அவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.சில ஆண்டுகளுக்கு முன் இவர்களின் வீட்டிற்கு ஒரு முறை விஜயம் செய்த போது சித்தார்த்தை பார்த்தவுடன் மலைக்கள்ளன் எம்ஜிஆரை நேரில் பார்த்தது போல் இருந்தது. வியந்தேன். சித்தார்த்தின் தாய் சத்யா அவர்கள் சித்தார்த்தை கைபிடித்து உயரத்திற்கு அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த குழந்தையை கொண்டாடுவதற்காக இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திருப்பூரின் அடையாளமாக திகழும் தொழிலதிபர் ஒருவரை சந்தித்து உரையாடிய போது, ‘குழந்தையை பெற்றெடுப்பது எளிது அதனை வளர்த்து ஆளாக்குவது என்பது தான் கடினம்’ என்றார். அந்த வகையில் சத்யா கரிகாலன் குழந்தையை நல்ல திறமைசாலியாக வளர்த்து ஆளாக்குகிறார். சித்தார்த் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தை. அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். சரீரம், சாரீரம் என இரண்டு விசயங்கள் இருக்கிறது. உடலுக்கு மட்டும் ஊட்டச்சத்து போதாது. மனதிற்கும் ஊட்டச்சத்து வேண்டும். யார் ஒருவர் தனது உடலையும் , குரலையும் காதலிக்கிறார்களோ… அவர்கள் சாதனையாளர்கள். அவரை சமுதாயத்தால் சீரழிக்கவே இயலாது. அந்த வகையில் சித்தார்த் அற்புதமாக பாடுகிறார். அதிலும் ஐந்து மொழிகளில் பாடியிருக்கிறார். அவரிடம் ஞானம் இருக்கிறது. அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். சித்தார்த் எதிர்காலத்தில் மிகப்பெரிய உயரத்தை தொடுவார் என வாழ்த்துகிறேன்” என்றார்.
நடிகர் – அரசியல்வாதி கருணாஸ் பேசுகையில்,”இந்த வரலாற்று சிறப்புமிக்க அரங்கத்தில் ஆறு வயது மதிக்கத்தக்க குழந்தையின் பாடும் திறமையையும், நடனமாடும் திறமையையும் கண்டோம். அனைவரும் பாராட்டினார்கள். ஆனால் இந்த சித்தார்த்திடம் திறமை இருக்கிறது என்று முதலில் கண்டறிந்தவன் நான். இந்தப் பிள்ளையை நான் தான் முதன் முதலில் நடனமாட வைத்தேன். அந்தத் திரைப்படம் விரைவில் வெளியாகும். அந்த பாடலும் அவனின் நடனமும் நிச்சயம் பேசப்படும். இவனுடைய மாஸ்டரை அவருடைய தாயாருக்கு அறிமுகப்படுத்தியதும் நான்தான். அந்த மாஸ்டரை ஒரு வீடியோ ஆல்பத்தில் நடன இயக்குநராக அறிமுகப்படுத்தியதும் நான்தான். அந்த வகையில் இந்த இடம் மிகவும் ராசியானது. அனைத்தும் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டதாகவே நான் கருதுகிறேன். இவருடைய திறமையை மேலும் வளர்த்து இறைவனின் ஆசியால் மென்மேலும் உயர வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.
இயக்குநர் இரா.சரவணன் பேசுகையில்,”சித்தார்த் ஆடி பாடி நடித்திருக்கும் இந்த ஆல்பத்தை நடிகர்கள் சசிகுமார் -சூரி- ஆகியோர் பார்த்தார்கள். இதில் சசிகுமார் – இந்த ஆல்பம் ஹிட் ஆவதற்கு முன்பே இவனிடம் கால்ஷிட் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்றார். அந்த அளவிற்கு அவருக்கு இந்த ஆல்பம் பிடித்திருந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் சூரி என்னிடம் இந்த ஆல்பத்தை பார்த்த பிறகு, ஆறு மாதத்திற்கு முன்னர் இந்த குழந்தையை பற்றி எனக்குத் தெரிந்திருந்தால் ‘மாமன்’ படத்தில் நடிக்க வாய்ப்பளித்திருப்பேன் என்றார். அந்த அளவிற்கு சித்தார்த்திடம் ஒரு எனர்ஜிடிக்கான டேலண்ட் இருக்கிறது. இந்த ஆல்பத்தை பார்த்தவுடன் சித்தார்த் மீது ‘நம்ம வீட்டு பிள்ளை’ என்ற பாச பிணைப்பு ஏற்படுகிறது.நாமெல்லாம் இரு மொழி… மும்மொழி… என பேசிக் கொண்டிருக்கும்போது.. சித்தார்த் ஐந்து மொழியில் பாடி ஆடி அசத்தியிருக்கிறார். இதனால் சித்தார்த் புதுக்கோட்டை மண்ணிலிருந்து பாலிவுட் வரை உயர்வர் என உறுதியாக சொல்ல முடியும். இதற்கு இங்கு வருகை தந்திருக்கும் எல்லோரும் சித்தார்த்தை ஆசீர்வதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்”என்றார்.

இயக்குநர் சற்குணம் பேசுகையில்,”ஒரு தேர்ந்த நடன கலைஞராகவும் பாடகராகவும் நடிகராகவும் சித்தார்த் இந்த ஆல்பத்தில் தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். அதிலும் ஐந்து மொழியில் அவர் பாடியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆல்பத்தில் நடனமாடி இருப்பதைவிட அதனை மேடையில் எந்தவித தவறும் இல்லாமல் ஆடுவது தான் தனி சிறப்பு. நடன கலைஞர்கள் நடனமாடும் போது அவர்களது முகத்தை உற்சாகம் வைத்துக் கொண்டு நடனம் ஆடுவது தான் தனித்துவம் என்பார்கள். அது சித்தார்த்திடம் இயல்பாகவே இருக்கிறது. சித்தார்த்தை தமிழ் சினிமா சார்பாக பாராட்டுகிறேன். தமிழ் சினிமாவின் உச்சம் தொட வாழ்த்துகிறேன்” என்றார்.
காயத்ரி ரகுராம் பேசுகையில்,”நடிகர் சிலம்பரசன் சின்ன வயதில் என்னுடன் தான் பாட்டு நடனம் ஆகியவற்றை கற்றுக் கொண்டார். அத்துடன் நடிப்பு ,சண்டை பயிற்சி, உடற்பயிற்சி, இசை கருவி வாசிப்பு ஆகியவற்றையும் கற்றுக் கொள்வார். அவர் சின்ன வயதில் கற்றுக்கொண்ட அனைத்து திறமையும் இந்த சித்தார்த்திடமும் இருப்பதை நான் பார்க்கிறேன். கமல் சாரும் இன்று அனைத்து துறையிலும் திறமை மிக்கவர். அந்த வரிசையில் அவர்களை தொடர்ந்து தனுஷ் -பிரசாந்த் – ஆகியோர்களையும் பார்த்திருக்கிறேன். அந்த வரிசையில் நான் சித்தார்த்தையும் பார்க்கிறேன். சித்தார்த்திற்கு கற்றுக் கொடுப்பதற்கு மாஸ்டர்கள் தயாராக இருந்தாலும்.. பெற்றோர்களின் ஊக்கமும் , ஆர்வமும் என்பது முக்கியம். அதனால் அவர்களுக்கும் நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த காமராஜர் அரங்க மேடையில் தான் நான், தொகுப்பாளினி கீர்த்தி, நடிகை ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடனமாடி பிரபலமாகி இருக்கிறோம். அந்த அளவிற்கு இந்த மேடை ராசியானது. அந்த வகையில் சித்தார்த்தும் ஆண்டவனின் ஆசியுடன் பெரும் புகழை பெறுவார்”என்றார்.


