.கூகுளில் 2 ஆண்டுகள் பயன்படுத்தப்படாமல் இருக்கும் கணக்குகளை நீக்கம்!
உலகளவில் டாப் நெட் சர்வீஸ் வழங்கும் கூகுள் நிறுவனம் புதிய பார்மேட்டில் பயணிக்க தொடங்கியிருக்கிறது. குறிப்பாக கூகுள் பார்ட் ஏஐ அறிமுகத்துக்குப் பிறகு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கூகுளின் செயல்திறனை அதிகப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையில் கூகுள் யூசர்களுக்கும் ஒரு வார்னிங் விடுக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் வகையில், ஜிமெயில், டிரைவ், மீட், யூடியூப் மற்றும் கூகுள் புகைப்படங்கள் உள்ளிட்ட கணக்குகளில் களையெடுப்பை நடத்த உள்ளதாக கூறியுள்ளது. அதன்படி கூகுள் கணக்கு வைத்துள்ள பயனர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அதனை பயன்படுத்தாமல் இருந்தால் அவற்றை நீக்க கூகுள் திட்டமிட்டுள்ளது. ‘இன்-ஆக்டிவ் அக்கவுண்ட்ஸ்’ சார்ந்த கொள்கை முடிவில் கூகுள் தரப்பில் மேற்கொண்டுள்ள மாற்றம் இதற்கு காரணம் என தெரிகிறது.

இதன் மூலம் பயனர்கள் தங்கள் கூகுள் கணக்குகளை 24 மாதத்திற்கு ஒரு முறையேனும் லாக்-இன் செய்து ரிவ்யூ செய்ய வேண்டும். அதை செய்யாத பயனர்களின் கணக்குகள் நீக்கப்படும் என தெரிகிறது. இதற்கு முன்னர் இன்-ஆக்டிவாக இருக்கும் பயனர் கணக்குகளில் இருக்கும் டேட்டாவை (தரவுகள்) மட்டுமே கூகுள் நீக்கி வந்தது. இப்போது கணக்கையே மொத்தமாக நீக்க உள்ளது.
இதன் காரணமாக ஜிமெயில், டாக்குமெண்ட், டிரைவ், காலண்டர், யூடியூப் மற்றும் கூகுள் போட்டோ என பயனர்கள் ஒரே நேரத்தில் பல தளங்களின் தரவுகளை இழக்க நேரிடும். ‘ரிஸ்கை குறைக்கும் வகையில் இந்த கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதி முதல் 2 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தாமல் உள்ள கூகுள் கணக்குள் நீக்கப்படும்’ என கூகுள் வலைப்பூவில் தெரிவித்துள்ளது. இந்த இடைப்பட்ட நேரத்தில் பயன்படுத்தாமல் உள்ள கணக்குகள் மற்றும் அதோடு தொடர்புடைய கணக்குகளுக்கு இது குறித்த விவரத்தை கூகுள் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


