June 2, 2023

ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் – முதல்வர் அறிவிப்பு!

சிறந்த நிர்வாகம், திட்டமிடல், ஆட்சித்திறன் ஆகியவற்றின் மூலம் பொற்கால ஆட்சி வழங்கிய ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் ஒவ்வொரு வருடமும் ‘ஆடிமாத திருவாதிரை’ நட்சத்திரத்தன்று கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரும்பாலான எளிய மக்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் :மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ராஜேந்திர சோழன். அரசனாக கோலோச்சிய 30 ஆண்டுகளில் முதல் 10 ஆண்டுகள் கடும் போரில் கழித்தாலும் இறுதி 15 ஆண்டுகள் அவன் அமைதியான, அற்புதமான ஒரு நல்லாட்சியை வழங்கினான். வேளாண் தொழிலும், வணிகமும் தழைத்தோங்கின. வென்ற நாடுகளில் இருந்து திறையாக வந்த செல்வம் ஒரு பக்கம் குவிந்தது. அதை முழுமையாக விவசாய மேம்பாட்டுக்கும், பாசன உருவாக்கத்துக்கும், கோயில்கள் கட்டுவதற்குமே ராஜேந்திரன் செலவிட்டான்.கலைஞர்களும், கல்வியாளர்களும் வளமோடும் மரியாதையோடும் வாழ்ந்தார்கள். அப்படி பேர் வாங்கிய ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப் புகழ் வாய்ந்த ஒன்றாகும். முதலாம் இராஜேந்திர சோழனின் காலம் முதல் சோழர்களின் கலை மற்றும் கட்டடக்கலைகளின் அழகிய தொகுப்பாகவும், வாழும் வரலாறாகவும் விளங்குகிறது. அண்மையில், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ (ஹிழிணிஷிசிளி) உலகப் புராதன பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பினைக் கண்டுகளித்திட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

அரியலூர் மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவாதிரை விழாவானது அப்பகுதிவாழ் மக்களால் வெகு விமர்சையாகவும் சிறப்புடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.மாவட்ட அளவில் கொண்டாடப்படுகிற இவ்விழாவினை அரசு விழாவாகக் கொண்டாட அப்பகுதிவாழ் மக்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர்கள் சார்பில் பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இக்கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயத்தில், மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவினை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் அரசு விழாவாகக் கொண்டாட உத்தரவிட்டுள்ளார். தற்பொழுது நிலவி வரும் கொரோனா நோய்த் தொற்று காரணமாக, வரும் ஆண்டு முதல் இந்த விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும் எனவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.