சென்னை: போலீஸ் இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலி. காவல்துறையில் முதல் உயிரிழப்பு..!!

தமிழக தலைநகர் சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஆய்வாளர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார். சென்னை மாம்பலம் காவல் நிலைய சட்டம் ஒழுங்குப் பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பாலமுரளி. கொரோனாவால் தமிழகத்தில் காவல்துறையில் நிகழ்ந்த முதல் உயிர் பலியாகும்.
முதன்முதலாக கடந்த 5 ஆம் தேதி காய்ச்சல் காரணமாக ஆய்வாளர் பாலமுரளிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து கொரோனா தொற்று உறுதியானதால் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள மகாநதி விடுதியில் அனுமதிக்கப்பட்டார். பிறகு தொடர்ந்து காய்ச்சல் இருந்து உடல் நிலை பாதிக்கப்பட்டதால் உடனே ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பாலமுரளி அனுமதிக்கப்பட்டார். ஆனால் கடந்த 13 ஆம்தேதி உடல் நிலை மோசமானது. இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தனது சொந்த செலவில் ரூ. 2.25 லட்சத்துக்கு மருந்தை வாங்கிக் கொடுத்தார். உரிய சிகிச்சை கிடைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.
அதன் பிறகு பாலமுரளியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவரது உடல் நிலையை தனியாக மருத்துவ குழு ஒன்று கண்காணித்து வந்தது. ஆனால் இன்று அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து பாலமுரளி இன்று மாலை சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
வடபழனி காவலர் குடியிருப்பில் வசித்து வந்த அவருக்கு மனைவி, 8-வது படிக்கும் மகள், 4-வது படிக்கும் மகன் உள்ளனர். சொந்த ஊர் வேலூர். இறந்து போன பாலமுரளியின் தந்தையும் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வுப் பெற்றவர். பாலமுரளி 2000 ஆம் ஆண்டு காவல்துறையில் நேரடி உதவி ஆய்வாளராக பணிக்கு சேர்ந்தவர். சென்னையில் நீலாங்கரை, கேகே நகர், மாம்பலம் காவல் நிலையங்கள் உள்பட பல காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளராக பணியாற்றியவர். சட்டம்-ஒழுங்கு பணியை சிறப்பாக செய்வதில் திறமை வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.