கீழடியில் அகழாய்வு : மத்திய அரசு மீண்டும் அனுமதி!
மத்திய கலாசாரத் துறை துறை அமைச்சர் மகேஷ் சர்மா, கீழடியில் 2018-19ஆம் ஆண்டில் அகழ்வாராய்ச்சி பணி மேற்கொள்ளத் தமிழக தொல்லியல் துறைக்கு அனுமதி தரப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அமைந்துள்ளது கீழடி எனும் ஊர். இது மிகவும் வரலாற்று சிறப்புமிக்க ஊராகும். மதுரையிலிருந்து 12கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த பகுதி, தமிழர்களின் ஆதிகால வாழ்க்கையைப் பற்றி இந்த காலத்துக்கு எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது. கீழடி ஆராய்ச்சி தொடங்கியது 2015ம் ஆண்டு. தொடக்கத்தில் இருந்தே பல அரிய தகவல்களை கீழடி ஆராய்ச்சியாளர்களுக்கு தந்தது. இதையெல்லாம் பார்த்து வியந்தே விட்டனர் என்றே சொல்லலாம். காரணம் இந்தியாவில் வேறெங்கும் கிடைக்காத மிக மிக பழமையான பொருள்கள் கீழடியில் கிடைத்திருப்பதுதான்.
முதற்கட்டமாக நடந்த இந்த அகழாய்வில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய மண் பானை ஓடுகள், ஆயுதங்கள், முதுமக்கள் தாழி உள்ளிட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. இதனையடுத்து 2016-ம் ஆண்டு 2-ம் கட்டமாகவும், 2017-ம் ஆண்டு 3-ம் கட்டமாகவும் கீழடியில் அகழாய்வு பணி நடைபெற்றது. இதில் கண்ணாடி துண்டுகள், பளிங்கு கற்கள் என சுமார் 1,600-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன.
இங்கு கிடைத்த அரிய வகை பொருள்களின் பழமை கிட்டத்தட்ட 2300 ஆண்டுகள் இருக்குமாம். அதாவது கிமு 2ம் நூற்றாண்டிலேயே பல வசதிகளோடு நகரக் கட்டமைப்பில் வாழ்ந்திருக்கின்றனர் என அனுமானிக்கலாம். நிச்சயம் இந்த பொருள்கள் கிமு 2ம் நூற்றாண்டை சேர்ந்தது என கூறுகிறார்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்.
ஆக இந்த அகழாய்வு முடிவில் கீழடியில் வைகை ஆற்றின் கரையோரத்தில் பண்டைய தமிழர்கள் நகரம் அமைத்து வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இதனைத்தொடர்ந்து கீழடியில் தொடர்ந்து அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் கீழடியில் ஆய்வு செய்து 4-ம் கட்ட அகழாய்வுக்கு நிதி ஒதுக்கீடு செய்தார்.இந்த நிலையில், கீழடியில் மீண்டும் அகழாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 2018-19-ம் ஆண்டில் அகழாய்வு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.