இந்தியாவில் 30 முதல் அமைச்சர்களில் 29 பேர் கோடீஸ்வரர்கள் & 13 பேர் கிரிமினல்கள்!

இந்தியாவில் 30 முதல் அமைச்சர்களில் 29 பேர் கோடீஸ்வரர்கள் & 13 பேர் கிரிமினல்கள்!

ந்தியாவில் தற்போதுள்ள 30 முதல்வர்களில் 27 பேர் கோடீஸ்வர முதல்வர்களாக உள்ளனர். இதில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிகபட்சமாக ரூ. 510 கோடி சொத்துக்களைக் கொண்டு முதலிடத்தில் உள்ளார் என்று ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) ஆய்வு செய்த கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.15 லட்சம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சொத்து மதிப்பு அடிப்பையில் 14வது இடத்தில் இருக்கிறார். ஏடிஆர் அறிக்கையில் கூறியுள்ளபடி, அவரது சொத்து மதிப்பு 8.88 கோடி ரூபாய் ஆகும். குற்ற வழக்குகள் அடிப்படையிலான பட்டியலில் மு.க. ஸ்டாலின் 2வது இடத்தைப் பெற்றுள்ளார். அவர் மீது மொத்தம் 47 வழக்குகள் உள்ளதாவும் இதில் 10 வழக்குகள் கடுமையான கிரிமினல் வழக்குகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது 28 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் (டெல்லி, புதுச்சேரி) முதல்வர்கள் உள்ளனர். ஜம்மு காஷ்மீர், குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் உள்ளதால் அங்கு முதல்வர் இல்லை. இந்நிலையில் இந்த 30 முதல்வர்களும் தேர்தல் வேட்புமனு தாக்கலின்போது சமர்ப்பித்த பிரமாண பத்திரங்களை, தேர்தல் விழிப்புணர்வு அமைப்பான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) ஆய்வுசெய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

பகுப்பாய்வு செய்யப்பட்ட 30 முதல்வர்களில், 29 பேர் (97 சதவீதம்) கோடீஸ்வரர்கள், ஒவ்வொரு முதல்வரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.33.96 கோடி. ஏடிஆர் அறிக்கையின்படி, 30 முதல்வர்களில் 13 பேர் (43 சதவீதம்) மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல் மற்றும் கிரிமினல் மிரட்டல் உள்ளிட்ட கடுமையான கிரிமினல் வழக்குகள் உள்ளன. ஐந்தாண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனையுடன் கூடிய ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்கள் குறித்த வழக்குகள் கடுமையான கிரிமினல் வழக்குகள் என்று கொள்ளப்பட்டிருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 முதல்வர்கள் (57 சதவீதம்) மீது எந்தவிதமான வழக்குகளும் இல்லை.

சொத்து மதிப்பில் முதல் மூன்று இடங்களில் ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி (ரூ. 510 கோடி), அருணாச்சலப் பிரதேசத்தின் பெமா காண்டு (ரூ. 163 கோடி) மற்றும் ஒடிசாவின் நவீன் பட்நாயக் (ரூ. 63 கோடிக்கு மேல்) ஆகியோர் உள்ளனர். மேற்கு வங்காளத்தின் மம்தா பானர்ஜி (ரூ. 15 லட்சத்துக்கு மேல்), கேரளாவின் பினராயி விஜயன் (ரூ. 1 கோடிக்கு மேல்) மற்றும் ஹரியானாவின் மனோகர் லால் (ரூ. 1 கோடிக்கு மேல்) ஆகியோர் மிகக்குறைந்த சொத்துக்களைக் கொண்ட மூன்று முதல்வர்கள் எனவும் ஏடிஆர் அறிக்கை சொல்கிறது.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார், டெல்லியைச் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இருவருக்குமே 3 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.குறைந்தபட்ச சொத்து கொண்டவராக உள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தற்போது நாட்டின் ஒரே பெண் முதல்வராக இருக்கிறார். மம்தா பானர்ஜி குற்ற வழக்குகள் ஏதும் இல்லாத முதல்வர்களில் ஒருவராகவும் திகழ்கிறார்.

Related Posts

CLOSE
CLOSE
error: Content is protected !!