தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியாதுங்கோ- குஷ்பூ அறிவிப்பு!

தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியாதுங்கோ- குஷ்பூ அறிவிப்பு!

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக,. பாஜகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்த குஷ்பூ இனி பிரச்சாரத்தில் ஈடுபட போவதில்லை என்று தலைமைக்கு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக தேசிய தலைவர் நட்டாவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், உடல்நிலை பாதிப்பு காரணமாக பிரச்சாரத்தில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளார். தனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் மீண்டும் வலி ஏற்பட்டுள்ளதால் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அதனால் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு குஷ்பூ எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிருத்திருப்பதாவது:

நன்றியோடும், சோகத்துடனும் இந்த கடிதம் மூலம் உங்களை அணுகிறேன். வாழ்க்கை என்பது கணிக்க முடியாதது. நாம் நன்றாக இருப்பதாக உணரும்போது சில பிரச்சனைகள் வருகிறது. நானும் அத்தகைய நிலையை எட்டியுள்ளேன். 2019ல் டெல்லியில் துரதிர்ஷ்டவசமாக நடந்த விபத்தில் எனக்கு வாலெலும்பு (tailbone-முதுகின் கீழ்பகுதியில் உள்ள எலும்பு) முறிவு ஏற்பட்டது. இந்த காயம் கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னைத் துன்புறுத்துகிறது. தொடர்ந்து சிகிச்சை எடுத்து கொண்டாலும் குணமடையாத நிலையில் இருக்கிறேன். இத்தகைய சூழலில் பிரசாரம் செய்ய வேண்டாம் என்று எனது மருத்துவக் குழு கண்டிப்புடன் அறிவுறுத்தியது. பிரசாரம் செய்தால் உடல்நிலை இன்னும் மோசமாகும் எனவும் எச்சரித்தனர். ஆனால் அர்ப்பணிப்பு உணர்வுள்ள ஒரு பாஜகவின் தொண்டராகவும், பிரதமர் மோடியை பின்பற்றும் நபராகவும் கட்சியின் போர்வீரர் என்ற முறையில் டாக்டர்கள் அறிவுரைக்கு எதிராக வலி மற்றும் வேதனைகள் இருந்தாலும் என்னால் முடிந்தவரை பிரசாரம் செய்தேன். ஆனால் இப்போது நிலைமை மோசமாகிவிட்டது.

பலகட்ட ஆலோசனைகளை பெற்றேன். அப்போது பிரச்சனையை சரிசெய்ய தேவையான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தினர். இந்த நடவடிக்கை என்பது ஒரு பெரிய அல்லது உயிருக்கு ஆபத்தான செயல்முறை அல்ல. இருப்பினும் கூட தாமதம் செய்ய முடியாத நிலை இருக்கிறது. ஏனென்றால் தாமதம் செய்வது எனது எதிர்கால வாழ்க்கைக்கு பிரச்சனையாக மாறலாம். மேலும் தற்போதைய வழக்கமான செயல்முறைகளை நான் குறைத்து கொண்டேன்.

பிரசாரம் என்பது நீண்ட பயணங்கள், நீண்டநேரம் அமர்ந்து இருப்பது உள்ளிட்டவற்றை கொண்டாக இருக்கும். இந்த 2 விஷயங்களையும் தேர்தல் பிரசாரத்தில் தவிர்க்க முடியாது. இதனால் தற்போதைய தேர்தல் பிரசாரத்தில் என்னால் பங்கேற்க முடியாது என்பதை கணத்த இதயத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

அதேவேளையில் முக்கியமான இந்த நேரத்தில் கட்சிக்கு என்னால் பங்களிப்பு செய்ய முடியவில்லையே என்ற ஆழ்ந்த மனவருத்தம் உள்ளது. இருப்பினும் எனது சமூக வலைதளம் மூலம் பாஜகவின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதன் மூலம் நான் தொடர்ந்து ஆதரவளிப்பேன். பிரசாரத்தின் ஒரு பகுதியாக இருப்பேன். பிரதமர் மோடி தொடர்ந்து 3வது முறையாக பதவியேற்பதையும் நான் எங்கிருந்தாலும் உரத்த குரலில் ஆரவாரம் செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!