கான்டாக்ட் லென்ஸ் மூலம் ரத்த அழுத்தத்தை அளக்கலாமாமில்லே!
இதயம் துடிக்கும்போது ஒருவித அழுத்தத்துடன் ரத்தம், ரத்தக்குழாய்க்குள் தள்ளப்படுகிறது. அந்த அழுத்தமே ரத்தத்தை உடலெங்கும் பாய்ந்தோடச் செய்கிறது. இதுதான் ‘ரத்த அழுத்தம்’. இது 120/ 80 மில்லி மீட்டர் ஹெச்ஜியாக இருந்தால் நார்மல். இதில் 120 என்பது இதயம் சுருங்கும்போது உண்டாகின்ற ‘சிஸ்டாலிக்’ அழுத்தம். 80 என்பது இதயம் விரியும்போது உண்டாகின்ற ‘டயஸ்டாலிக்’ அழுத்தம். ரத்த அழுத்தம் அதிகமானால் முதலில் தலைவலி, தலைசுற்றல், வாந்தி, மயக்கம் வரும். பிறகு, இதயத்துக்கு ஆபத்து வரும்; சிறுநீரகம் கெட்டுவிடும்; பக்கவாதம் வந்துவிடும்.ரத்த அழுத்தத்தை அளக்க தற்போது ‘டிஜிட்டல் ரத்த அழுத்தக் கருவி’தான் புழக்கத்தில் உள்ளது. இதை புஜம் அல்லது கை விரலில் கட்டிக்கொண்டால் தானாகவே ரத்த அழுத்தத்தைக் காண்பித்துவிடும். சென்சார் மற்றும் மைக்ரோ புராசசர் இணைந்துள்ள இக்கருவி ரத்த அலைகளில் உண்டாகின்ற அழுத்தத்தை அளப்பதால் இந்த அளவு மிகச் சரியாக இருக்கும் என்று நம்ப முடியாது என்று கூறப்பட்டதையடுத்து அறிவியல் வளர்ச்சியின் அடுத்த கட்டமாக இப்போது கான்டாக்ட் லென்ஸ் மூலம் ரத்த அழுத்தத்தை அளக்கும் டெக்னாலஜியைக் கண்டுபிடித்துள்ளனர் ஜெர்மனி மருத்துவர்கள்.

கான்டாக்ட் லென்ஸ் என்பது பார்வைக் கோளாறுகளை சரி செய்ய மூக்குக் கண்ணாடிக்குப் பதிலாக கார்னியா மீது பொருத்தப்படுகின்ற ஒரு வகை லென்ஸ். இதையடுத்து 2000த்தில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மேட்டோ லியோனார்டி, ரேனே காட்கூப் ஆகியவர்கள் ‘சென்சிமெட்’ எனும் ஒரு மைக்ரோ சென்சாரை கான்டாக்ட் லென்சின் ஓரத்தில் பொருத்தி, கண்ணில் உள்ள அழுத்தத்தை (Intra Ocular Pressure-சுருக்கமாக ஐஓபி) அளந்து சொன்னார்கள். இந்தக் கருவியின் பெயர் ‘டிரைகர் ஃபிஸ்’. கண்ணில் அளக்கப்படும் ஐஓபி அளவு மின்சார சிக்னல்களாக மாற்றப்பட்டு, ஒரு ஸ்மார்ட்போன் அளவுக்குப் பயனாளியின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும் ரெக்கார்டரில் பதிவாகிக் கொண்டே இருக்கும். கண்ணில் இந்த அழுத்தம் அதிகமானால் குளுக்கோமா நோய் வந்து கண்ணைக் குருடாக்கிவிடும். ஆகவே, 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது இந்த அளவை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு டிரைகர்ஃபிஸ் கருவி பயன்படுகிறது.
இப்போது இதே கருவியில் சில மாற்றங்களைச் செய்து, கண் ரத்தக்குழாயில் ரத்த அழுத்தத்தை அளப்பதன் மூலம் உடலின் ரத்த அழுத்தத்தைக் கணிக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர், ஜெர்மனி மருத்துவர்கள் ஸ்டோட்மியாஸ்டர் மற்றும் ஜோனஸ் ஜோஸ்ட். இதற்கு ‘கோல்டுமேன் கான்டாக்ட் லென்ஸ்’ என்று பெயர்.
இவர்களுக்கு ஒருபடி மேலே போய் கூகுள் நிறுவனத்தைச் சேர்ந்த பிரைன் ஓட்டிஸ், பேபாக் பார்விஸ் ஆகிய இருவரும் ‘சென்சிமெட்’ சென்சாருடன் ஆன்டெனா, கெப்பாசிட்டர், கன்ட்ரோலர் என்று இன்னும் சில கருவிகளை இணைத்து கண்ணீரில் உள்ள ரத்தச் சர்க்கரை அளவை அளக்க முடியும் என்றும், அதன் மூலம் கையில் ரத்தத்தை ஊசி குத்தி எடுக்காமல், ரத்தப் பரிசோதனை செய்யாமல் ரத்தச் சர்க்கரை அளவை நொடிக்கு ஒருமுறை தெரிந்து கொள்ள முடியும் என்றும் நிரூபித்துள்ளனர். சர்க்கரை நோயாளிகளை சந்தோஷப்படுத்தும் இந்த ‘கூகுள் கான்டாக்ட் லென்ஸ்’ இன்னும் சில ஆண்டுகளில் சந்தைக்கு வந்துவிடும்.


