ஓர் எண்ணம் + இரண்டு மூளை + 5 ஆயிரம் மைல்கள் தொலைவு = விஞ்ஞானிகள் சாதனை!

ஓர் எண்ணம் + இரண்டு மூளை + 5 ஆயிரம் மைல்கள் தொலைவு = விஞ்ஞானிகள் சாதனை!

பழங்காலத்தில் செய்திகளை ஓரிடத்தில் இருந்து வேறு இடத்திற்கு அனுப்புவதற்கு பல்வேறு முறைகள் கையாளப்பட்டன. அஞ்சல் துறை வளர்ச்சி அடைந்த பின் அஞ்சல் அட்டைகள் உள்ளிட்டவற்றின் வழியே தகவல்கள் பரிமாற்றம் நடைபெற்றன. இந்த தகவல்கள் உள்ளூர் மட்டுமின்றி அயல் நாடுகளுக்கும் சென்று சேர்ந்தன. எனினும், இதற்கு சற்று கால அளவு தேவைப்படும். சில தகவல்கள் மிக தொலைவான பகுதிகளுக்கு சென்று சேர்வதற்கு சில நாட்கள் எடுத்து கொள்ளும்.
tec - sep 2
அதன்பின்னர் தொலைபேசி வழியே தகவல் பரிமாற்றம் நடந்தது. இது மிக விரைவாக நடந்தது. தற்பொழுது எழுதுவது மற்றும் பேசுவது என்பது இல்லாமல், ஒருவரது நினைவுகளை மற்றொருவரின் மூளைக்குள் செலுத்தி தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ளும் வகையில் ஆய்வாளர்கள் மேற் கொண்ட முயற்சி வெற்றி அடைந்துள்ளது. அறிவியலாளர்கள், ஒருவரின் எண்ண அலைகளை 5 ஆயிரம் மைல்கள் தொலைவில் உள்ள மற்றொரு நபருக்கு பரிமாற்றம் செய்துள்ளனர். அதற்கு எலெக்ட்ரோஎன்செபலோகிராபி எனப்படும் ஈ.ஈ.ஜி. ஹெட்செட்களை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

அதன் உதவியுடன் மூளையில் ஏற்படும் மின்சார செயல்பாடு பதிவு செய்யப்பட்டது. குறிப்பிட்ட சில வார்த்தைகள் உருவாக்கும் மின் செயல்பாடுகள் பைனரி ஆக மாற்றப்பட்டன. இந்த வாழ்த்து செய்திகள் அடங்கிய வார்த்தைகள் இந்தியாவில் உள்ள திருவனந்தபுரம் நகரத்தில் இருந்து பிரான்ஸ் நாட்டில் உள்ள ஸ்டிராஸ்பர்க் நகருக்கு அனுப்பப்பட்டன. இந்த செய்தியை கணினி ஒன்று மொழிமாற்றம் செய்தது. அதன் பின் மின்சார செயல்பாடுகள் கொண்டு தகவலை பெறுபவரின் எண்ணத்திற்குள் அதனை நிலை நிறுத்தியது.

அது ஒளி அலைகளாக தோன்றி இருந்தது. அடுத்தடுத்து இருந்த ஒளி அலைகள் செய்தியில் உள்ள குறியீடுகளை தகவல்களாக பெறுவதற்கு அனுமதித்தது. மனிதர்கள் தகவல்களை ஒருவரது மூளையில் இருந்து மற்றொருவரின் மூளைக்குள் செலுத்துவது என்பது இதுவே முதன்முறை என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோன்ற தகவல் பரிமாற்றங்களை ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் என இரு நாடுகளில் இருந்தும் பரிசோதனை முறையில் செய்து அதில் ஆய்வாளர்கள் வெற்றியும் கண்டுள்ளனர். மனித மூளை செயல்பாட்டு திறன் நிறைந்த நியூரான்களை கொண்டுள்ளது.

இவை எண்ணிக்கையில் கோடிக்கணக்கில் இருக்கும். இவற்றை ஒன்றாக இணைத்து நீட்டினால் 1,05,600 மைல்கள் தொலைவிற்கு செல்லும். நமது மூளை நாம் ஒன்றை நினைக்கும்போது, மிக பலவீனமான ஆனால் தனித்துவமிக்க மின்சார சிக்னல்களை உருவாக்குகின்றன. நியூரான்களுக்கு இடையே நடைபெறும் வேதி வினையால் உருவாகும் மின்சார ஓட்டம் ஆனது அளவிட கூடியதாக இருக்கும். இந்த மின் சிக்னல்களை பதிவு செய்வது மற்றும் பரிமாற்றம் செய்வது என்பது எலெக்ட்ரோஎன்செபலோகிராபி (ஈ.ஈ.ஜி.) என அழைக்கப்படுகிறது.

இது கடந்த 1924 ஆம் ஆண்டில் இருந்து மருத்துவ ரீதியாக சாத்தியமான ஒன்று. இரண்டாவதாக நடந்த பரிசோதனையில் மொத்தத்தில் 15 சதவீத அளவிற்கே தவறுகள் நடந்துள்ளன. அவற்றில், தகவல்களை குறியீடுகளாக மாற்றுகையில் 5 சதவீத தவறும், அதன்பின் குறியீடுகளை தகவல்களாக மாற்றுகையில் 11 சதவீத தவறும் நடந்துள்ளது. எனவே, மனித மூளையுடன் மிக சரளமான முறையில் உரையாடும் வகையில் கணினிகள் செயல்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று ஆய்வாளர்கள் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் கணினி மற்றும் மூளையில் இருந்து மூளைக்கு உள்ள வழக்கம்போல் நடைபெற கூடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts