மத்திய பொது பட்ஜெட் 2014 – 15! தமிழக தலைவர்களின் கமெண்ட்

மத்திய பொது பட்ஜெட் 2014 – 15! தமிழக தலைவர்களின் கமெண்ட்

2014-15 நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட் குறித்து நாடாளுமன்றத்தில் உள்ள தமிழக அரசியல் கட்சி உறுப்பினர்கள் வரவேற்றும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் இதோ:
Arun jetly
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் பொருளாதாரத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: வளர்ச்சியைப் புனரமைத்தல், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நிலையை மேம்படுத்தல் ஆகிய சவால்களை எதிர்கொள்ள மத்தியில் உள்ள புதிய அரசு உண்மையான அக்கறையுடன் இருக்கிறது என்பதை பிரதிபலிப்பதாக மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது. நிதி சிக்கனத்துக்கு முன்னுரிமை அளிக்கும் அதே சமயத்தில், புதிய அரசிடமிருந்து அதிக அளவில் பார்க்கப்பட்ட சலுகைகளை நிறைவேற்றும் விதமாகவும் அமைந்துள்ளது. இந்த பட்ஜெட் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஆக்கப்பூர்வமாக தயாரிக்கப்பட்டுள்ளது. நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்த தெளிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. செலவின நிர்வாக ஆணையம் அமைப்பது வரவேற்கத்தக்க அம்சமாகும்.

இ.எம். சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்): இந்த பட்ஜெட், கிட்டத்தட்ட சிதம்பரத்தின் 10-ஆவது பட்ஜெட் போல உள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களைத் செயல்படுத்தத் தடையாக இருந்த பாஜக, தற்போது அதே திட்டங்களை பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. அதாவது, பட்ஜெட் அறிக்கையானது “புதிய மொந்தையில் பழைய கள்’ போல உள்ளது.

அன்புமணி ராமதாஸ் (பாமக): நல்ல, நடுநிலையான இந்த பட்ஜெட்டை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது. விவசாயத் திட்டங்களுக்கும் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கும் அதிக முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. சுகாதாரத்திற்கும், கல்விக்கும் அதிக கவனம் செலுத்தி அதிக திட்டங்கள் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. புகையிலைப் பொருள்களுக்கு அதிக வரி சுமத்தியிருப்பதும் வரவேற்புக்குரியது. தமிழகத்திற்கு ஜவுளிப் பூங்கா திட்டம், தேசிய முதியோருக்கான நிறுவனம் ஆகியவை அறிவிக்கப்பட்ட்ள்ளது பாராட்டத்தக்கது.

டி. ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்): மத்திய பட்ஜெட்டில் வார்த்தைகள் ஜாலமும், நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியினரைத் திருப்திபடுத்தும் வகையிலும் சில அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. எனினும், அடிப்படையில் இந்த பட்ஜெட் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவானது. இதன் உள்நோக்கமே எல்லா துறையிலும் பொது-தனியார் கூட்டு முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான். பாதுகாப்புத் துறை, காப்பீட்டுத் துறை ஆகியவற்றில் 49 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவித்திருப்பது நாட்டுக்கு பாதகத்தை ஏற்படுத்தும். பொதுத் துறை வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறி இந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளின் நிதி நிலையை பலவீனப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டால் ஒரு பயனும் இல்லை.

டி.கே. ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): ரயில்வே பட்ஜெட்டை போன்றே மத்திய பொது பட்ஜெட்டும் பன்னாட்டு நிதியையும், பொது-தனியார் கூட்டை (பிபிபி) நம்பித்தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் “துண்டு விழுவது’ என்பது ரூ.14 லட்சத்து 767 கோடி நிகர வருவாய் இழப்பு ஆகும். இந்த இழப்பு எவ்வாறு சரிக்கட்டப்படும் என்பதற்கு பட்ஜெட்டில் விளக்கமில்லை. மறைமுக வரி 22 ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய நிதிகூட குறையலாம். வலதுசாரியை நோக்கி இந்திய பொருளாதாரம் சென்று கொண்டிருப்பதை பட்ஜெட் உணர்த்துகிறது. சோப்பு, எண்ணெய், உணவுப் பொருள்கள் போன்றவற்றுக்கான வரி குறைப்பு பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே உதவிடும். நடுத்தர தர வர்க்கத்தைச் சார்ந்து நிற்கும் வகையில் சில திருப்திபடுத்தும் ஜரிகை வேலைகள் இந்த பட்ஜெட்டில் உள்ளன. பாமர மக்களுக்கு இந்த பட்ஜெட்டால் எவ்வித பயனும் இல்லை. வேலைவாய்ப்பை அதிகரிக்க எந்த உத்தரவாதமும் பட்ஜெட்டில் இல்லை.

கனிமொழி, திமுக எம்பி: பட்ஜெட்டில் தனி நபர் வருமான உச்ச வரம்பு அளவு ரூ.50 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. அது இன்னும் அதிகரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு என தனியாக வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்துப் போனது. விவசாயத் துறைக்கொன பல அறிவிப்புகள், நதி நீர் இணைப்புத் திட்ட ஆய்வுக்கு நிதி, தேசிய அளவிலான உழவர் சந்தை அறிவிப்புகளையும் திமுக வரவேற்கிறது. தூத்துக்குடி துறைமுகம் விரிவுபடுத்துவது தொடர்பான அறிவிப்ப மகிழ்ச்சி அளித்தாலும், அத்துடன் சேது சமுத்திரத் திட்டத்தையும் சேர்த்திருக்கலாம். அன்னியச் செலாவணியை ஈட்டித் தரும் நலிவடைந்துள்ள திருப்பூர், கோவை பகுதி ஜவுளி, பனியன் தொழிற்சாலைகள் வளர்ச்சிக்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஐஐடி, எய்ம்ஸ் மருத்துவமனை போன்ற திட்டங்கள் தமிழகத்திற்கென பிரத்யேகமாக அறிவிக்கப்படாததும் ஏமாற்றம் அளிக்கிறது. இந்த பட்ஜெட் வெற்றியா, தோல்வியா என்பதை அதன் அறிவிப்புகளை வைத்து மட்டும் தீர்மானிக்க முடியாது. அவற்றைச் செயல்படுத்துவதில்தான் அதன் வெற்றி உளளது

error: Content is protected !!