டோக்கியோவில் ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக தொடக்கம்! – வீடியோ

டோக்கியோவில் ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக தொடக்கம்! – வீடியோ

கொரோனா தொற்று அச்சம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே போன ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்கியது. போட்டியை ஜப்பான் பேரரசர் நருஹிட்டோ தொடங்கி வைத்தார். தொடக்ககத்தில் ஜப்பான் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் ஜப்பான் நாட்டு கொடி ஏற்றப்பட்டது. அந்நாட்டு பிரதமர் யோஷிஹிடே, ஜில் பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்டோர் தொடக்க விழாவில் பங்கேற்றுள்ளனர்.

இன்று தொடங்கிய ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது .இன்றைய விழாவில் அனைத்து நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஒவ்வொரு நாடுகளிலும் மிகவும் குறைவான அளவிலான வீரர் மற்றும் வீராங்கனைகளே பங்கேற்றனர்.டோக்யோ நகரத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருப்பதால் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியில் கூட 1,000 பேருக்கும் குறைவானவர்கள் மட்டுமே பங்கேற்றார்கள்.

இந்தியா சார்பில் 6 அதிகாரிகளும் 19 வீரர்-வீராங்கனைகளும் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.

இந்த ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள இந்தியாவிலிருந்து 127 வீரர்-வீராங்கனைகள் சென்றுள்ளனர். ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் அதிகபட்ச வீரர்-வீராங்கனைகள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 18 போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கிறார்கள். இதில் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், குத்துச் சண்டை, வில் வித்தை, ஹாக்கி போட்டிகளில் இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மொத்தம் 205 நாடுகளில் இருந்து 11,000க்கும் அதிகமான வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கின்றனர். இதுவரை இல்லாத வகையில் நாடுகளின் கொடிகளை ஏந்தி செல்வதற்கு இம்முறை இருவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது இதற்கு முன்பு நடைபெற்ற அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலும் ஒரு நாட்டைச் சேர்ந்த ஒரு வீரர் அல்லது வீராங்கனை தேசிய கொடியை ஏந்தி வருவார்கள். இம்முறை பாலின சமத்துவம் என்பதை கடைபிடிக்க ஒலிம்பிக் அமைப்பாளர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இந்தியா சார்பில் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், ஹாக்கி அணி வீரர் மன்பிரித் சிங் ஆகியோர் இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏந்தி சென்றனர். தொடக்க விழா அணிவகுப்பில் முதல் நாடாக ஒலிம்பிக்கை தோற்றுவித்த கிரீஸ் நாடு சென்றது இறுதி நாடாக தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் ஜப்பான் சென்றது.

error: Content is protected !!