அக்.1 முதல் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி!

அக்.1 முதல் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி!

நாட்டில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி அக்டோபர் முதல் வாரத்தில் கிடைக்கும் என்று இந்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை சேர்ந்த ஜைடஸ் கெடிலா என்ற நிறுவனம் ஜைகோவ்-டி என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இந்திய ஒன்றிய அரசின் உயிரிதொழில்நுட்பத்துறை மற்றும் ஐசிஎம்ஆர் ஆகியவற்றுடன் இணைந்து இது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது, இந்தியாவில் கண்டறியப்பட்டு, பயன்பாட்டுக்கு வரும் இரண்டாவது உள்நாட்டு தடுப்பூசி மற்றும் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் ஆறாவது கொரோனா தடுப்பூசியாகும். இந்தியாவில் 12-18 வயதுள்ள குழந்தைகளுக்கு செலுத்த இத்தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை 28 நாள்கள் இடைவெளியில், 3 டோஸ்கள் போட்டுக் கொள்ள வேண்டும்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண்,” 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான ஜைகோவ்-டி தடுப்பூசி அக்டோபர் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். தற்போது, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

ஆனால், மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக எச்சரிக்கப்படுவதால், அவர்களுக்கான தடுப்பூசி பயன்பாட்டை கொண்டு வருவது அவசியமாக உள்ளது. குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது பள்ளிகளை விரைவில் திறக்க உதவும்.

இணை நோயுள்ள குழந்தைகள் மட்டுமின்றி அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும். ஏனெனில், வெளியே செல்லும் குழந்தைகள், அதன்மூலம் வீட்டிற்கு கொரோனா பரவலை கொண்டு வந்து முதியவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே தடுப்பூசி சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்திலிருந்து மாதந்தோறும் 10 மில்லியன் தடுப்பூசிகளை தயாரிக்கவுள்ளதாக தடுப்பூசி நிறுவனம் கூறியுள்ளது என்று கூறினார்.