விண்வெளிக்கு பயணம் செய்த குழு பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியது! – வீடியோ

அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி சுற்றுலா நிறுவனம் வர்ஜின் கலாக்டிக். இந்த நிறுவனம் மனிதர்களை ஏற்றிச் செல்லக்கூடிய ‘ஸ்பேஸ்ஷிப் – -2 யூனிட்டி’ என்ற விண்வெளி ஓடத்தை நேற்று விண்வெளியில் செலுத்தியது. அந்த ஓடத்தில் ரிச்சர்ட் பிரான்ஸன் (71), அவரது நிறுவனத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீஷா பண்ட்லா (34) உள்ளிட்ட 6 பேர் இருந்தனர். இவர் ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்தவர்.
இரட்டை விமானத்தின் அடிப்பகுதியில் யூனிட்டி விண்வெளி ஓடம் இணைக்கப்பட்டிருந்தது. தரையிலிருந்து 13 கி.மீ. உயரத்தில் இரட்டை விமானம் சென்றபோது, அதிலிருந்து விண்வெளி ஓடம் விடுவிக்கப்பட்டு விண்வெளியை நோக்கிச் சென்றது. சிறிது நேரத்தில் 88 கி.மீ. உயரத்தை அந்த விண்வெளி ஓடம் அடைந்தது. பூமியின் புவியூர்ப்பு விசைக்கு அப்பால் சில நிமிஷங்கள் எடையற்ற தன்மையை 6 பேரும் உணர்ந்த பின்னர், விண்வெளி ஓடம் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியது.விண்கலத்தில் இருந்து வெளியே வந்த குழுவினரை அனைவரும் வாழ்த்தினர்.
அடுத்த ஆண்டுமுதல் சுற்றுலாப் பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்லவுள்ள நிலையில், அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் முதல்முறையாக தானே அதில் செல்ல முன்வந்து செயல்படுத்தியுள்ளார் பிரான்சன். பயணம் வெற்றி, இது தனது வாழ்நாளின் சிறந்த அனுபவம் என பிரான்சன் தெரிவித்தார். விண்வெளியில் பயணம் செய்த அனுபவத்தை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கான திட்டங்களையும் அவர் அறிவித்தார். இந்த பயணத்தின்மூலம் விண்வெளிக்கு பறந்த 3வது இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை ஸ்ரீஷா பாண்ட்லா பெற்றுள்ளார்.