வல்லமை – விமர்சனம்!

அண்மை காலமாக பள்ளி, பணியிடங்கள், பயணங்கள், வீடுகள் என அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்து வருகின்றன. தொடரும் வன்முறைகள் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று வயது வித்தியாசம் இல்லாமல் பெண் சமூகத்தை விட்டுவைப்பதில்லை.ஆண்டுக்கு நான்கு அல்லது ஐந்து குற்றச் சம்பவங்களே ஊடகங்களில் வெளிவந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக நாளொன்றுக்கு கணக்கற்று பெண்களுக்கு எதிராக பாலியல்ரீதியான குற்றச் செயல்கள் நடந்து வருகின்றன.அப்படி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண் பிள்ளைகள் பற்றி செய்திகளாக மட்டுமே கடந்து போகும் இந்த சமூகத்திற்கு, பாதிக்கப்படும் பெண் பிள்ளைகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அனுபவிக்கும் வலியைச் சொல்லி ஏற்றுக் கொள்ள முடியாத தீர்வுடன் ‘வல்லமை’ என்றொரு டைட்டிலில் ஒரு திரைப்படத்தை வழங்கி கவனத்தை ஈர்க்க முயன்றிருக்கிறார்கள்.
அதாவது பிலோ மிடில் கிளாஸைச் சேர்ந்த மெயின் கேரக்டரான ஃபார்மர் பிரேம்ஜி ஒய்ஃபை இழந்த நிலையில் , தன் ஒரே செல்ல மகளை நன்றாக படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்று பிரியப்பட்டு சென்னைக்கு வந்து குடியேறுகிறார். சென்னையில் வாடகை வீடு, வேலை, மகளின் பள்ளி படிப்பு என்று அனைத்தும் அவர் நினைத்து போல் நடக்கிறது. இதற்கிடையே மகளின் உடல்நிலை பாதிப்பு தொடர்பாக மருத்துவரை சந்திக்கும் போது, சிறுமி அவருக்கே தெரியாமல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. தனக்கு நேர்ந்த அநீதி இனி யாருக்கும் நடக்க கூடாது, என்று எண்ணும் சிறுமி, தன்னை சீரழித்த குற்றவாளி யார்? என்பதை கண்டுபிடித்து அவரை கொலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். மகளின் மனநிலையை புரிந்துக் கொள்ளும் பிரேம்ஜி, குற்றவாளி யார்? என்பதை கண்டுபிடித்து, அவரை கொலை செய்யும் முயற்சியில் இறங்குகிறார். முடிவில என்னவானது என்பதே வல்லமை படக் கதை.
ஏழை விவசாயியாக, வளரிளம் சிறுமிக்கு அப்பாவாக வரும் பிரேம்ஜிக்கு இது முற்றிலும் புதிய வேஷம்.எவ்வள்வோ பார்த்துட்டோம் என்ற ஒற்றை வசனத்தைச் சொல்லி ஒப்பேற்றி விடும் பிரேம்ஜி இதில் நடிக்க முயற்சி செய்திருப்பதே பெரியவிஷயம்..! சிறுமியாக நடித்த திவாதர்ஷி கேஷூவலான நடிப்பைக் கொடுத்து பாஸ் மார்க் வாங்கி விடுகிறார். தனது அப்பாவோடு பேசுவதாக இருக்கட்டும், அப்பா மடியில் படுத்துக் கொண்டு கவலைப்படும் இடமாக இருக்கட்டும் என பல இடங்களில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார். அதிலும் தனக்கு நேர்ந்த அநீதிக்கு பழிதீர்ப்பதற்கு எடுத்த முடிவு அதிர்ச்சியளித்தாலும், தன் குழந்தை முகத்தோடு அதற்கான காரணத்தை சொல்லும் போது,ஆடியன்ஸ் மனதில் போய் உட்கார்ந்து விடுகிறார்.
இன்ஸ்பெக்டர் கேரக்டரில் வரும் ’வழக்கு எண்’ முத்துராமன், கான்ஸ்டபிளாக ரோலில் வரும் சூப்பர் குட் சுப்பிரமணியம், தொழிலதிபராக வரும் சி.ஆர்.ரஞ்ஜித், டிரைவராக வரும் சுப்பிரமணியன் மாதவன், பெட்ரோல் திருடும் இளைஞராக நடித்திருக்கும் விது, பள்ளி உதவி பணியாளராக நடித்திருக்கும் திலீபன் என அனைவரும் தங்களுக்கு கிடைத்த கதாபாத்திரத்தின் வலுவை சரியாக வெளிப்படுத்தி விடுகிறார்கள்.
பின்னணி இசை (மியூசிக் டைரக்டர் ஜி.கே.வி) மற்றும் ஒளிப்பதிவு (கேமராமேன் சூரஜ் நல்லுசாமி)இருவரின் பங்களிப்பும் படத்திற்கு ஒரு மெகா பலத்தை கொடுத்து விட்டது.
படத்திற்கு மற்றொரு பலம் என்றால் அது வசனம் தான். ஆங்காங்கே, தனது வசனத்தின் மூலம் தனிக் கவனம் பெறுகிறார் டைரக்டர். ஆனாலும் ப்ளாஷ் பேக் எது? நிகழ்கால காட்சி எது என்பதில் சற்று குழப்பம் ஏற்படுவதுடன் கதையை விட்டு சற்று வெளியே சென்று மீண்டும் கதைக்குள் இழுப்பதெல்லாம் சரி செய்து இருக்கலாம். ஆனாலும் நாம் நடமாடும் சமூகத்தில் நடக்கும் அவலத்தை, திரை மொழியில் சற்று சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்திருக்கும் டைரக்டர் கருப்பையா முருகன் திரைக்கதையில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்களை தெரிந்தே கலக்கி விட்டு விட்டதால் பத்தோடு ஒன்றாய் ஆகி விட்டது இந்த வலிமை !
மார்க் 2.25/5