குழந்தைகள் காலை உணவு உண்ணும் போது அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி- முதல்வர் நெகிழ்ச்சி!

”மாணவ செல்வங்களே உங்களுக்கு காலையும், மதியமும் உணவு வழங்குகிறோம். நீங்கள் எதை பற்றியும் கவலை படாமல் படியுங்கள், படியுங்கள், படியுங்கள். கல்வி என்பது நாம் போராடி பெற்ற உரிமை. அதை உங்களது சொத்தாக ஆக்கி கொள்ளுங்கள். எந்த காரணம் கொண்டும் கல்வியை விட்டு விலகி செல்லாதீர்கள், விலகி செல்ல நான் விட மாட்டேன்.” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஏழை குழந்தைகள் காலை உணவு அருந்தாமலேயே பள்ளிக்கு வருவதால் சோர்வு அடைவதால் அதனை போக்கும் நோக்கில் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக் கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி தமிழக சட்டப்பேரவையில் 7.5.2022 முதல்வர் மு.க. ஸ்டாலின் விதி எண். 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி இந்த காலை உணவுத் திட்டத்தை மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவினை பரிமாறி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, மாணவர்களுடன் உணவருந்தினார். தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில், இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் ரூ. 33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 417 மாநகராட்சி பள்ளிகளில் 43,681 மாணவர்கள், 163 நகராட்சி பள்ளிகளில் 17,427 மாணவர்கள், 728 வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளில் 42,826 மாணவர்கள், 237 தொலைதூர, மலைபிரதேச பள்ளிகளில் 10,161 மாணவர்கள், என மொத்தம் 1,545 பள்ளிகளில் தொடங்கப்பட்டு, 1,14,095 மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
இத்திட்டத்தை துவக்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “வரலாற்றில் நிலைத்து நிற்கக்கூடிய திட்டம் இது. என் வாழ்வில் பொன்னாள் என சொல்ல தகும் வகையில் இந்த நாள் எனக்கு அமைந்து உள்ளது. பள்ளிக்கு பசியோடு படிக்க வரும் குழந்தைகளுக்கு முதலில் உணவு வழங்கும் வசதியை ஏற்படுத்தி உள்ளோம்.
தமிழகத்தில் ஒருபுறம் வரலாறு காணாத அளவில் நெல் உற்பத்தி உச்சம் கண்டுள்ளது. மறுபுறம் குழந்தைகள் பசியோடு இருக்க கூடாது எனும் நோக்கில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் சிக்கல்களின் ஆதிமுலத்தை அறிந்து தீர்வு காண வேண்டும் என்ற முயற்சியின் ஒரு பகுதியாக ஆதிமூலம் பள்ளியில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் துவங்கப்படும் ஆதிமூலம் பள்ளி – கீழ் அண்ணாதோப்பில் அமைந்துள்ளது. அண்ணாவின் பிறந்தநாளில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது.என்ன ஒரு பொருத்தம்! 102 ஆண்டுகளுக்கு முன்னாள் இதே நாளில் தான் சர்.பி.டி.தியாகராயர் மதிய உணவு திட்டத்தை துவங்கி வைத்தார். ஒரு நூற்றாண்டுக்கு பின்னர் இந்த காலை உணவு திட்டம் இன்று துவங்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரான்சு உள்ளிட்ட நாடுகளில் பள்ளிகளில் காலை உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. அது குழந்தைகளின் கற்றல் திறனை அதிகரிக்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர். இன்று குழந்தைகள் காலை உணவு உண்ணும் போது அவர்கள் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி எனக்கு அளவில்லாத மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
எத்தகைய நிதி சுமை இருந்தாலும் பசி சுமையை போக்க வேண்டும் என இந்த திட்டத்தை துவங்கி உள்ளோம். ஆயிரம் விளக்கு தொகுதியில் தான் முதன்முதலாக மதிய உணவு திட்டம் துவங்கப்பட்டது. அந்த தொகுதி தான் நான் முதல்முறை சட்டமன்ற உறுப்பினர் ஆனேன் என்பதையும் இப்போது நினைத்து பார்க்கையில் மகிழ்கிறேன்.
இந்த திட்டத்தின் மூலம் தினமும் ஒரு குழந்தைக்கு ரூ.12.75 செலவு செய்யப்பட உள்ளது. உண்மையில் இது செலவு அல்ல அரசின் கடமை. என்னுடைய கடமை. இந்த திட்டம் அனைத்து பள்ளிக்கும் விரைவில் நிறைவேற்றப்படும். இந்த திட்டத்தை இலவசம் என்றோ, சலுகை என்றோ யாரும் நினைக்க கூடாது. இது கடமை. இந்த திட்டத்தால் பள்ளி செல்லும் மாணவர்களின் கல்வி விகிதம் அதிகரிக்கும். இடைநிற்றல் குறையும். இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் மாணவர்கள் வாழ்வில் உயர்ந்தால் அது தான் இந்த அரசின் சாதனை.
போராடிப் பெற்ற கல்வி உரிமையை கடைக்கோடித் தமிழனுக்கும் கொண்டுசேர்க்க நீதிக்கட்சி வகுத்து காமராசரும் – திராவிட அரசுகளும் செம்மைப்படுத்திய மதிய உணவுத் திட்டத்தின் அடியொற்றி, காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தேன்!
பசிப்பிணி ஒழித்து, அறிவுப்பசிக்கு அமுதிடுவோம்! #TNBreakfast pic.twitter.com/ZcaSpMHpNn
— M.K.Stalin (@mkstalin) September 15, 2022
மாணவ செல்வங்களே உங்களுக்கு காலையும், மதியமும் உணவு வழங்குகிறோம். நீங்கள் எதை பற்றியும் கவலை படாமல் படியுங்கள், படியுங்கள், படியுங்கள். கல்வி என்பது நாம் போராடி பெற்ற உரிமை. அதை உங்களது சொத்தாக ஆக்கி கொள்ளுங்கள். எந்த காரணம் கொண்டும் கல்வியை விட்டு விலகி செல்லாதீர்கள், விலகி செல்ல நான் விட மாட்டேன். தமிழ் சமூகத்தின் வறுமை அகற்றிட எந்த தியாகத்தையும் செய்ய நான் தயாராக உள்ளேன்” என தெரிவித்தார்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத் தொடக்க விழாவில், கோயம்புத்தூர், வடிவேலம்பாளையத்தில் கடந்த 30 ஆண்டு காலமாக ஏழை எளியவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கும் சமூக சேவகி கமலாத்தாளுக்கு பொன்னாடை அணிவித்து, முதல்வர் சிறப்பு செய்தார். மேலும், தமிழகத்தின் பள்ளிகளில் உணவு வழங்கப்படும் திட்டங்களின் ஒரு நூற்றாண்டு நிகழ்வுகளை, வரலாற்று சம்பவங்களை அரிய ஆவணங்களை தொகுத்து செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு பதிப்பகத்தால் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு நூற்றாண்டின் கல்விப் புரட்சி என்ற சிறப்பு மலரை முதல்வர் வெளியிட, சமூகசேவகி கமலாத்தாள் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.
முன்னதாக முதல்வர், மதுரை, நெல்பேட்டையில் மைய சமையல் கூடத்தைப் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பள்ளிகளுக்கு காலை உணவு எடுத்துச் செல்லும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்