இலங்கை குண்டுவெடிப்பின் மெயின் அக்யூஸ்ட் பலி!- அதிபர் சிறிசேனா தகவல்
இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பிற்கு அரசே பொறுப்பு. புலனாய்வுப்பிரிவு மற்றும் காவல்துறை தலைவர் ஆகியோர் தங்களின் பொறுப்புக்களை உரிய முறையில் செய்ய தவறியதால், அவர்களை ராஜினாமா செய்ய உத்தரவிட்டேன். மேலும் இந்த வெடிகுண்டு தாக்குதலுடன் நெருங்கிய தொடர்புடையவராகக் கருதப்படும் மதகுரு ஜக்ரன் ஹசிம் உயிரிழந்துவிட்டதாக இலங்கை அதிபர் சிறிசேனா தெரிவித்து உள்ளார்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று, தீவிரவாதிகளால் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தேவாலயங்கள் மற்றூம் நட்சத்திர ஓட்டல்கள் என மொத்தம் 8 இடங்களில் நடத்தப்பட்ட இந்த வெடிகுண்டு தாக்குதல்களில் சிக்கி 359 பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் காரணமாக இருந்தவர் என்று கருதப்பட்ட இஸ்லாமிய மதகுரு ஜக்ரன் ஹசீம் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில், நட்சத்திர ஒட்டலில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மதகுரு ஜக்ரன் ஹசீம் உயிரிழந்துவிட்டதாக இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தெரிவித்துள்ளார். ஷாங்க்ரி ஓட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலில், ஜக்ரன் உயிரிழந்துவிட்டதாக உளவுத்துறை அமைப்புகள் தகவல் கொடுத்தனர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக ஜக்ரன் ஹசீம் செயல்பட்டு வந்தார் என கூறப்படுகிறது. இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.