கொலைக் குற்றம் புரிந்த சவுதி இளவரசர் தலைசீவப்பட்டது
சவுதியின் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர் இளவரசர் துருகி பின் சவுத் அல்–கபீர். இவருக்கு தன்னுடைய சக நண்பரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதியில் 2016ஆம் ஆண்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 134வது நபர் இளவரசர் கபீர் ஆவார்.

இளவரசரின் மரண தண்டனை தொடர்பாக சவுதி உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இளவரசர் கபீர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். எனவே சவுதியில் நீதியை நிலைநாட்ட அல்லாஹ் பரிந்துரைத்த விதிகளின்படி நடவடிக்கைகளை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது” என கூறப்பட்டுள்ளது.
இளவரசருக்கு எவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை. சவுதியைப் பொறுத்தவரை வாளைக் கொண்டே மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
முன்னதாக, 2012-ஆம் ஆண்டு இளவரசர் அல்-கபீருக்கும், அவரது நண்பரான அதெல் அல் மகிமத்துக்கு இடையே நடந்த வாக்குவாதத்தில் இளவரசர் மகிமத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
இதில் கைது செய்யப்பட்ட இளவரசர் கபீருக்கு 2014-ம் ஆண்டு சவுதி ரியாத் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. சவுதி அரேபியாவைப் பொறுத்தவரை அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரிதாகவே மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் 1975-ஆம் ஆண்டு சவுதி அரசர் ஃபைசலை கொலை செய்த குற்றதுக்காக ஃபைசலின் சகோதரர் மகன் ஃபைசல் பின் முசைத் அல் சவுத் என்பவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


