செயில் நிறுவனத்தின் முதல் பெண் தலைவரானார் சோமா மண்டல்!
செயில் என அழைக்கப்படும் ஸ்டீல் அதாரிட்டி ஆப் இந்தியா லிமிடட் (SAIL) நிறுவனத்தின் தலைவராக இருந்த அனில் குமார் சவுத்ரி கடந்த வியாழக்கிழமை ஒய்வு பெற்றார். இதை அடுத்த செயில் நிறுவனத்தின் தலைவர் பதவியை சோமா மண்டல் ஏற்றுள்ளார்.
ரூர்கேலாவில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்.ஐ.டி) 1984ம் ஆண்டு எலெக்ட்ரிகல் என்ஜினியரிங் படிப்பை சோமா மண்டல் முடித்தார். அதன் பின்னர், தேசிய அலுமினிய கம்பெனியில் தனது பணியை மண்டல் தொடங்கினார். அங்கு உயர் பதவிகளை வகித்தார். கடந்த 2017ம் ஆண்டு அவர் செயில் நிறுவனத்தில் வர்த்தக பிரிவின் இயக்குனராக பொறுப்பேற்றார்.
பல புதிய பொருட்கள் உற்பத்திக்கும், புதிய சந்தைப்படுத்துதல் உத்திகள் அறிமுகத்துக்கும் மண்டல் காரணமாக இருந்ததாக செயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் பேசிய மண்டல், ‘பல தசாப்தங்களாக நிறுவனத்தின் தலைமையாலும், பணியாளர்களின் பங்களிப்பு காரணமாகவும் செயில் நிறுவனம் பெரும் மரபைப் கொண்டுள்ளது. இந்தியாவைக் கட்டமைத்ததில் முன்னணியில் செயில் நிறுவனம் உள்ளது. நிறுவனத்தின் அடிப்படை மற்றும் மேல்மட்ட செயல்பாடுகளில் தற்போது நாம் கவனம் செலுத்த வேண்டும். ‘, என்றார்.