ராபர்ட் கால்டுவெல்: திராவிட மொழியியலின் முன்னோடி நினைவு நாள்!
திராவிட மொழியியலின் தந்தை எனப் போற்றப்படும் ராபர்ட் கால்டுவெல், தமிழுக்கும், திராவிட மொழிகளுக்கும் அளப்பரிய பங்காற்றிய ஒரு பெருமதிப்புக்குரிய அறிஞர். ஸ்காட்லாந்தில் பிறந்த இவர், கிறிஸ்தவ சமயப் பணி செய்வதற்காக 1838-ல் இந்தியாவுக்கு வந்தார். கப்பல் பயணத்தின்போது பிரௌன் என்ற ஒரு நண்பருடன் ஏற்பட்ட அறிமுகம், தமிழைக் கற்க இவருக்கு உந்துதலாக அமைந்தது. சென்னைக்கு வந்த பின், தமிழ் மொழியின் அழகியலால் ஈர்க்கப்பட்டு, அதைத் திறம்படக் கற்கத் தொடங்கினார்.
ஒரு மொழியியல் அறிஞரின் பயணம்
கால்டுவெல், தமிழ் மொழியின் வட்டார வழக்குகள் மற்றும் அதன் மூலத்தைக் கண்டறியும் ஆர்வம் காரணமாக, நீண்ட நடைப் பயணங்களை மேற்கொண்டார். திருச்சி, சிதம்பரம், நீலகிரி, நாகப்பட்டினம் போன்ற பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மலைக்கிராமங்களுக்குச் சென்று மக்களின் பேச்சு வழக்கையும், பண்பாட்டையும் நேரடியாகக் கேட்டறிந்தார். இந்தப் பயணங்கள் அவருக்கு மொழியியல் தரவுகளைச் சேகரிப்பதற்கான வாய்ப்பை வழங்கின.
இந்தப் பயணங்களின்போதுதான், அவர் ‘திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு’ என்ற நூலை எழுதினார். இதில், கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள் போன்ற தலைவர்களைப் பற்றிய தகவல்கள், ஆங்கிலேயர் ஆட்சியின் நிகழ்வுகள் போன்றவற்றைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளார். அதுமட்டுமன்றி, பல்வேறு மொழிகளில் தமிழ்ச் சொற்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் அவர் ஆராய்ந்தார். தமிழில் உள்ள சொற்கள் கிரேக்க மொழியில் எவ்வாறு திரித்து கையாளப்பட்டுள்ளன என்பதை அவர் தனது ஆய்வில் சுட்டிக்காட்டினார். அத்துடன், சிங்கள இலக்கியமான ‘மகாவம்சம்’ என்ற நூலின் துணைகொண்டு, தமிழ்-ஈழ உறவுகளையும் ஆய்வு செய்தார். தென்னிந்திய மொழிக் குடும்பத்தில் சீர்திருத்தப்பட்ட மொழிகள், சீர்திருத்தப்படாத மொழிகள் ஆகியவற்றை அடையாளம் கண்டறிந்து அவற்றைக் கட்டுரைகளாகவும் வெளியிட்டார்.

‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ – ஒரு மைல்கல்
கால்டுவெல்லின் வாழ்நாள் முழுவதும் மேற்கொண்ட ஆய்வுப் பணியின் உச்சம், 1856-ல் அவர் வெளியிட்ட ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூல். பல்வேறு மொழியியல் அறிஞர்களின் ஆய்வுக்கட்டுரைகளைப் படித்து, குறிப்புகள் எடுத்து, அவற்றை ஒப்பிட்டு ஆய்வு செய்து, அவர் இந்த நூலை ஆங்கிலத்தில் எழுதினார்.
இந்நூல், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென் இந்திய மொழிகள், சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியவை அல்ல, மாறாக அவை அனைத்தும் ஒரு பொதுவான “மூலத் திராவிட மொழிக் குடும்பத்தைச்” சேர்ந்தவை என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்தது. அதுவரை நிலவி வந்த தவறான கருத்தை மாற்றி, திராவிட மொழியியலுக்கு ஒரு புதிய திசையை இந்நூல் ஏற்படுத்தியது. கால்டுவெல்லின் இந்த ஆய்வு, தமிழ் ஒரு தனித்துவமான மற்றும் தொன்மையான மொழி என்பதை உலகிற்கு உணர்த்தியது.
தமிழ் மொழியின் செம்மொழித் தகுதி
கால்டுவெல், தமிழ் மொழிக்கு ஒரு தனித்துவமான தகுதியை வழங்கினார். “தன்னிடையே இடம்பெற்றிருக்கும் பிற மொழிச் சொற்களை அறவே ஒழித்துவிட்டுத் தனித்து உயிர் வாழ்வதோடு… அவற்றின் துணை, சிறிதும் இல்லாமல் வளம்பெற்று வளர்வதோடு முன்பிருந்த நிலையிலும் சிறந்த உயர் தனிச் செம்மொழியாக நிலைபெறும்,” என்று அவர் கூறினார். அவரது இந்த தீர்க்கதரிசனமான கூற்று, தமிழ் மொழிக்குச் செம்மொழி அங்கீகாரம் கிடைப்பதற்கான ஒரு முக்கிய அடித்தளமாக அமைந்தது.
வாசிப்பின் மீதான காதல்
வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த கால்டுவெல், “வாசிப்புப் பழக்கம் இல்லாமல் மாணவன் உயர்மதிப்பெண்களைப் பெற்றுவிட முடியும்; ஆனால், எதனையும் விரிவாக அறியாமல், தன் பாடத்திட்டத்தில் மட்டும் திருப்தி கொண்டுவிடுவான்” என்று குறிப்பிட்டார். அவரது இந்த வார்த்தைகள், வாசிப்பு என்பது வெறும் பாடப் புத்தகத்தைத் தாண்டி அறிவை வளர்க்க உதவும் ஒரு கருவி என்பதை வலியுறுத்தின.
ராபர்ட் கால்டுவெல், ஒரு மொழியியல் ஆய்வாளர் என்பதைத் தாண்டி, தமிழ் மொழியின் பெருமையையும், அதன் தனித்தன்மையையும் உலகிற்கு உணர்த்திய ஒரு பிதாமகன் ஆவார். தமிழின் பெருமையை நிலைநிறுத்திய அவரது பங்களிப்புகள், தமிழர்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கும்.
நிலவளம் ரெங்கராஜன்


