இன்னிக்கு ஓய்வூதியர் தினம் 💰

இன்னிக்கு ஓய்வூதியர் தினம் 💰

ய்வூதியர் என்பது உண்மையில் கொண்டாடப்படவேண்டிய ஒரு தினம் தான்.. அதை விட அப்படி வரும் தொகையை நம்பி இருக்கும் நம் தாய் தந்தைகளை நல்ல படியாக பராமரிப்பது அதை விட கொண்டாடப்படவேண்டிய ஒன்று. காரணம் ஓய்வூதியம் பெறுவோர் ஒரு நாட்டிற்கே மிகவும் தகுதியான சொத்துக்கள், ஏனெனில் அவர்களிடம் வேறு எங்கும் காண முடியாத சிறந்த வளம், அதாவது அனுபவம். அவர்களின் அனுபவமே அவர்களின் செல்வம் என்று சொன்னால் அது மிகையல்ல..ஆனாலும் சுப்ரீம் கோர்ட், ஓய்வூதியம் குறித்து வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை நினைவுகூறும் வகையில் இந்தியாவில் ஆண்டு தோறும் டிசம்பர் 17 ஆம் நாள் ஓய்வூதியர் தினமாகக் நினைவுகூறப்படுகிறது.

அரசுத் துறைகளில் பணி புரிந்து பணி ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் நிலை குறித்து பல்வேறு ஓய்வூதியர் சங்கங்கள் தாக்கல் செய்த வழக்குகள் மீது உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஓய்வூதியர்கள் அனைவரும் ஒரே சீரான வகுப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தீர்ப்பளித்துள்ளது. அதில் ஓய்வு பெற்ற தேதியை அடிப்படையாக வைத்து ஓய்வூதியப் பலன்களை வழங்குவதில் பாகுபாடு செய்வது, ஓய்வூதியர்களை பிரிவினைச் செய்வதற்கு ஒப்பாகும் என்றும், மேலும் இவ்வாறு பாகுபாடு காட்டுவது இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 14-ஐ மீறுவதாகும் என்று 17 டிசம்பர் 1982 ஆண்டில் உச்சநீதிமன்றம், டி. எஸ். நகரா என்ற ஓய்வூதியர் தொடுத்த வழக்கில் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டி பல தீர்ப்புகள் வழங்கப்பட்டன.மேலும் டி. எஸ். நகரா வழக்கில் அப்போதைய சுப்ரீம் கோர்ட் நீதியரசர் ஒய். வி. சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில், 17 டிசம்பர் 1982 அன்று அளித்த உரிமை சாசனத் தீர்ப்பின் ஒரு பகுதியில், ஓய்வூதியம் என்பது, உழைத்த உழைப்பிற்கு கொடுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியம் ஆகும் எனவும், அரசியல் அமைப்பு சட்டப்பிரிவுகள் 139 மற்றும் 148 (5)-இன் படி ஓய்வூதியம் என்பது ஓய்வூதியர்களுக்கு சொத்துரிமை போன்ற நிலைத்த சட்டபூர்வமான உரிமையாகும் என்றும் தெரிவித்தது.ஆகவே ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 17-ஆம் நாள் ஓய்வூதியர் நாள், ஓய்வூதியர்களால் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுது.

கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் இந்தியாவில் பென்ஷன் என்பது ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட நல்ல அம்சங்களில் ஒன்று. ஆனால் 1982 – ஆம் ஆண்டு டிசம்பர் 17 – ஆம் நாள், இந்திய சுப்ரீம் கோர்ட் ஓய்வூதியம் பற்றிய குறிப்பிடத்தக்க ஒரு தீர்ப்பினை D S நகாரா என்பவரது வழக்கில் ( NAKARA CASE ) வழங்கியது. அதில் “ Pension is neither a gift nor a reward or bounty. Pension is the right of a retired Government Servant who had served nation for a long time” என்று குறிப்பிட்டது. இத்தனைக்கும் அந்தக் காலத்தில் ஓய்வூதியர் என்றால் அவர்கள் வயதானவர்கள் என்ற நிலை இருந்தது. இன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் விருப்ப ஓய்வு முறை வந்த பிறகு நடுத்தர வயதுள்ளவர்களும் ஓய்வூதியம் பெறுவோர்களாக உள்ளனர். அவர்களும் சில மாதங்களில் வயதானவர்களாக வந்து விடுவார்கள் தனி எபிசோட். இப்போது பல நிறுவனங்களில் ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. கருணைத் தொகை என்ற பெயரில் கடமையே என்று தருகிறார்கள். இப்போது விற்கும் விலைவாசியில் அந்த கருணைத் தொகை என்பது யானைப் பசிக்கு சோளப்பொரி கொடுப்பது போன்றது தான்.

முன்பெல்லாம் ஓய்வூதியம் பற்றிய அதிக தகவல்களை தெரிந்து கொள்ள முடியாது. சம்பந்தப்பட்ட அலுவலக மூத்த ஊழியர்களையோ அல்லது தம்மைப் போல ஓய்வு பெற்ற விவரம் தெரிந்த ஓய்வூதியர்களையோ தேடிப் போய் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.அவர்கள் தரும் விவரங்களும் துல்லியமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் இப்போது கணிணியுகத்தில் இண்டர்நெட் மூலம் அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடிகிறது. மத்திய மாநில அரசுகள் தங்கள் இணையத் தளங்கள் ( www.pensionersportal.gov.in ) மூலம் ஓய்வூதியர்களுக் கான, ஓய்வுக்கால பயன்கள், ஓய்வூதிய விதி முறைகள், அறிக்கைகள் என்று எல்லா தகவல்களையும் உடனுக்குடன் தெரிவிக்கின்றன. மாநில அரசு இணைய தளங்கள் அந்தந்த மொழியிலேயே வெளியிடுகின்றன. நமது தமிழ் நாடு அரசும் (www.tn.gov.in ) ஓய்வூதியம் பற்றிய செய்திகளை ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி களில் வெளியிட்டு வருகிறது.

இப்போது அனைத்து ஓய்வூதியங்களும் வங்கிகளின் மூலமே வழங்கப் படுகின்றன. எனவே ஓய்வூதியகாரர்களுக்கு வங்கிகளில் அவர்களது ஓய்வூதியத்தின் அடிப்படையில் கடன் வழங்கப்படுகிறது. பலர் சரியான திட்டமிடுதல் இல்லாத படியினால் காலம் முழுக்க கடனாளியாகவே இருந்து இறந்து போகின்றனர். இன்னும் சிலர் ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டு, கடன் வாங்கிய ஆசாமி கட்டாதபோது இவர்கள் நோட்டீஸ், வழக்கு , வக்கீல் என்று நிம்மதியை இழக்கிறார்கள். எனவே ஓய்வூதியர்கள் கவனமாக இருத்தல் அவசியம். வங்கிகளில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் என்று சில சமயம் அழைப்பார்கள். சென்ற கூட்டத்தில் சொன்ன அதே குறைகளை சில ஓய்வூதியர்கள் இந்த கூட்டத்திலும் சொல்லுவார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு நோட் புத்தகத்தில் அன்றைய தினம் மட்டும் ஓய்வூதியர்கள் சொல்வதை குறித்துக் கொள்வதோடு சரி. உண்மையாகவே ஓய்வூதியதாரர்களுக்கு வேண்டியன செய்பவர்களும் உண்டு. இன்னும் சில வங்கிகளில் எதற்கு வம்பு என்று இதுபோன்று ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டமே கூட்டுவதில்லை. வங்கிகள் மூலம் ஓய்வூதியம் பெறுபவர் களுக்கு கிடைக்கும் கடன் வசதிகள் தபால் அலுவலகம் மூலம் பெறுபவர்களுக்கு கிடைப்பதில்லை.

இதை எல்லாம் சரி செய்வது குறித்து பேச வேண்டியது அவசியம்!

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!