பரம்பொருள் விமர்சனம்!

நம் தமிழ்நாட்டில் போலீஸ் ஆபீசராக இருந்த பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்குகளை கண்டுபிடிப்பதற்காக ஐகோர்ட்டால் நியமிக்கப்பட்டார். இதை அடுத்துசிலை கடத்தல் பிரிவில் ஐஜி பொன் மாணிக்கவேலின் செயல்கள் காவல்துறை அதிகாரிகளே விமர்சிக்கும் வண்ணம் தனி நபர் விளம்பர வேலைகளாக அமைகிறது என்ற பிரச்சாரம் எழுந்ததெல்லாம் பலருக்கும் நினைவிருக்கும். . இத்தனைக்கும் நம் நாட்டில் பல நூறு சிலைகள் கொள்ளை போய்விட்ட நிலையில், 1947க்குப் பிறகு 2000 வரை வெறும் 18 சிலைகள் மட்டுமே இந்தியாவுக்கு மீட்டு வரப் பட்டிருக்கிறது. 2000 முதல் 2012 வரை 1 சிலை கூட மீட்டுக் கொண்டு வரப்படவில்லை என்ற சூழலில் இங்கு நடக்கும் சிலை கடத்தல் மற்றும் கடத்தப்படும் சிலைகள் எப்படி விலை பேசப்படுகிறது போன்ற தகவல்களை பாமரனுக்கும் புரியும் விதத்தில் கதை,, திரைக்கதையைக் கோர்த்து அதையும் சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார் டைரக்டர் அரவிந்தராஜ்..அதிலும் ஒற்றை சிலையை மையமாகக் கொண்டு சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நம்மை கொஞ்சம் டென்ஷனாக்கி வைத்திருப்பதோடு, க்ளைமாக்சில் எதிர்பாராத ட்விட்ஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார் என்பதுதான் விசேஷம்.
அதாவது ஹீரோ அமிதாஷின் தங்கச்சி உடல்நிலை பாதிக்கப்பட்டு போராடி வருகிறார். அவரை காப்பாற்ற சில பல லட்சங்கள் தேவைப்படும் சூழலில் பணத்தை எப்படியாவது சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற முயற்சியில் இறங்குகிறார். அதை ஒட்டி, சிலை கடத்தல்காரன் ஒருவன் வீட்டில் இருக்கும் ஐம்பொன் சிலை ஒன்றை திருட முயற்சிக்கிறார். கூடவே போலீஸ் இன்ஸ்பெக்டர் சரத்குமார் வீட்டிலும் அவர் திருட முயற்சித்து, அவரிடம் மாட்டிக் கொள்கிறார். போலீஸாக இருந்தாலும் தப்பான வழியிலும் பயணித்து சம்பாதிக்கும் சரத்குமார், சிலை கடத்தல் கும்பலுடன் அமிதாஷிக்கு தொடர்பு இருப்பதை அறிந்து, அவர் மூலமாக சிலையை கைப்பற்றி அதை விற்பனை செய்து பணம் சம்பாதிக்க திட்டமிடுகிறார். தங்கையின் மருத்துவ செலவுக்காக சரத்குமாருடன் பயணிக்க அமிதாஷும் சம்மதம் தெரிவித்து இருவரும் இணைந்து 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலை ஒன்றை கைப்பற்றி விற்பனை செய்ய முயற்சிக்கிறார்கள். அதே சமயம், சிலை கடத்தல் விவகாரத்தில் அமிதாஷை பலியாக்கி விட்டு பணத்துடன் எஸ்கேப் ஆகவும் சரத்குமார் திட்டம் போட, இறுதியில் நடந்தது என்ன? என்பதை சொல்வது தான் ‘பரம்பொருள்’ படக் கதை.
போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் சரத்குமார் இதுவரை இல்லாத வகையில் நெகடிவ் கதாபாத்திரத்தில் வருவது ரசிக்கவே வைக்கிறது. ரைட் ராயலாக லஞ்சம் வாங்குவது, சிலையை கடத்தல்காரர்களிடம் விற்க விலை பேசுவது, போலிச சான்றிதழ் தர மறுக்கும் பாலாஜி சக்திவேல் கழுத்தை பிடித்து நெருக்கி மிரட்டுவது என்று முக்கால் வில்லனாகவே மாறியிருப்பது ஷாக். சில இடங்களில் காமெடியாக பேசி கலகலக்க வைக்கிறார். நாயகன் அமிதாஷ் பேமிலி சென்டிமெண்ட் & க்ரைம் அக்கியூஸ்ட் என இருதலை கொல்லி எறும்பு ரோலில் சிக்கி தவிப்பதை பர்ஃபெக்டாக செய்து ஸ்கோர் செய்கிறார் அமிதாஷ் . அதிலும் சரத்குமாரிடம் வசமாக சிக்கிக் கொண்டு அவர் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுவதும் புதிய சிலையை செய்ய தன் பங்கு பணத்தை கொடுத்து விட்டு க்ளைமாக்சில் சஸ்பென்ஸ் ரோலாக அவர் மாறுவது வாவ் சொல்ல வைக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் காஷ்மீரா பர்தேசி, சிலை வடிக்கும் கலைஞராக நடித்திருக்கிறார். அவருக்கு அதிக காட்சிகள் இல்லை என்றாலும், அவர் வரும் ஒரு சில காட்சிகளிலேயே சிலை போலவே அழகாக இருக்கிறார் . வருண் ராவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த பாலகிருஷ்ணன் சிறப்பாக நடித்திருந்தார். குமார் கங்கப்பன் கலை இயக்கமும், பாண்டிகுமார் கேமராவும் படத்தின் தரத்தைக் கூட்டுகிறது. குறிப்பாகச் சொல்வதானால் குறைவான ஒளியில் கூட காட்சிகளை தெளிவாக ரசிக்கும்படி படமாக்கியிருப்பதற்கு பாராட்டுகள். யுவனின் பின்னணி இசை ஒவ்வொரு காட்சிகளுக்கும் பரபரப்பைக் கூட்டுகிறது.
தொடக்கத்தில் பழைய சிலை கடத்தல் கதையை எதற்கு கையிலெடுத்தாரோ? என்று யோசிக்க வைத்து விட்டு இண்டர்வெல்லுக்கு பிறகு கதையை ஜெட் வேகத்தில் நகர்த்தி செல்வதில் ஜெயித்து விடுகிறார்கள். அதிலும், சிலை உடைந்த பிறகு சரத்குமார் மற்றும் அமிதாஷ் என்ன செய்ய போகிறார்கள், என்ற எதிர்பார்ப்பெல்லாம் வேற லெவல்.. சிலைக்கடத்தல் மேட்டரை இன்னும் சற்று அதிகமாகவே சொல்லியிருக்கலாம். காதல் காட்சிகள் குறிப்பாக காஷ்மீரா கண்ணில் படும் காட்சிகள் குறைவுதான்…!
ஆனாலும்பரம்பொருள் – கோலிவுட்டின் லேட்டஸ்ட் த்ரில்லர்
மார்க் 3.5/5