இலக்கியத்திற்கான நோபல் பரிசு : நார்வே எழுத்தாளர் ஜான் ஃபோஸ்!
சர்வதேச அளவில் மிகப்பெரிய கவுரவங்களில் ஒன்றாக கருதப்படுவது நோபல் பரிசுகள். ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய 6 பிரிவுகளின் கீழ் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டிற்கான நோபல் பரிசுகள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், இலக்கியத்திற்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.
இந்நிலையில் இலக்கியத்திற்கான நோபல் பரிசை நோபல் கமிட்டி இன்று அறிவித்தது. அதன்படி நார்வையைச் சேர்ந்த ஜான் ஃபோஸ் என்பவருக்கு இவ்வாண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, பிரெஞ்சு எழுத்தாளர் அன்னி எர்னாக்ஸுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது என்பதும் கவிதை, சிறுகதைகள், குழந்தை இலக்கியம், கட்டுரைகள், நாடக வசனம் என பன்முக இலக்கிய தன்மை வாய்ந்தவர் ஜான் போஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் எழுதிய ‘for his innovative plays and prose which give voice to the unsayable’ என்ற புத்தகத்துக்காக, இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 64 வயதாகும் ஜான் ஃபோஸ் எழுதிய முதல் நாவலான ‘சிவப்பு, கருப்பு’ (Raudt, svart) 1983ஆம் ஆண்டு வெளியானது. உணர்ச்சிபூர்வமான அந்த நாவல் தற்கொலையை கருப்பொருளாகக் கொண்டது. பல வழிகளில், அவரது பிற்கால படைப்புகளுக்கு முன்னோடியாக அமைந்தது எனவும் நோபல் பரிசு அறிக்கை கூறியது.
புகழ்பெற்ற நாடக ஆசிரியர் ஹென்றிக் இப்சனுக்குப் பிறகு நார்வே நாட்டில் அதிக முறை அரங்கேற்றப்பட்ட நாடகங்கள் இவருடையவை. 2022ஆம் ஆண்டில் இவரது A New Name: Septology VI-VII என்ற நாவல் புக்கர் பரிசுக்கான இறுதிப்பட்டியலில் இடம்பெற்றிருந்தது. சொந்தப் படைப்புகள் மட்டுமின்றி, 2011ஆம் ஆண்டில் பைபிளையும் தனது நார்வே பாஷையில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்.
இந்த பட்டியலில் அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் இன்னும் அறிவிக்கப்பட உள்ளது. இந்த பரிசை வெல்லப்போவது யார் என்பது தொடர்பாக உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.