கல்லூரிகளில் புதிய நுழைவுத்தேர்வு :ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது!

கல்லூரிகளில் புதிய நுழைவுத்தேர்வு :ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது!

த்திய பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு வகுப்புகளில் சேர விரும்பும் 12–ம் வகுப்பு மாணவர்கள் பொது நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்று மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘கியூட்’ என்ற பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு அமல்படுத்தினால் அது மாணவர்களை கடுமையாக பாதிக்கும் என்று தமிழக அரசு கூறி வருகிறது. எனவே
மத்திய பல்கலைக்கழங்களில் நடத்த திட்டமிட்டுள்ள நுழைவுத் தேர்வை கைவிடக்கோரி தமிழகசட்டசபையில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-–

இளங்கலைப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு குறித்த தீர்மானத்தின் முன்னுரையாக நான் ஒருசில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். மாநிலத்தின் கல்வி உரிமை மீது ஒன்றிய அரசின் தாக்குதல் தொடருகிறது. பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களிலும், இளங்கலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகளுக்கு “பொது நுழைவுத் தேர்வு”என்று அறிவித்து, வருகின்ற 2022–-2023–ம் கல்வியாண்டு முதல் செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறது.

இந்த நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை மாநிலப் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள்கூட இளங்கலைப் படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என “பீடிகை” போட்டு, ஓர் அறிவிப்பினை ஒன்றிய அரசின்கீழ் இயங்கக்கூடிய பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. அதனை எதிர்த்து இந்த மாமன்றத்தில் பின்வரும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.

தீர்மானம்

“ஒன்றிய அரசின்கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியக் குழு, 2022–-2023–ம் கல்வியாண்டு முதல், அம்மானியக் குழுவின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களிலும், இளங்கலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகள் தேசிய தேர்வு முகமை (-NTA) நடத்தும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (-CUET) மூலம் மட்டுமே நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

+2 தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களைக் கணக்கில் கொள்ளாமல், பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் (CUET) மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும் எனவும், மாநிலப் பல்கலைக்கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் மாணவர்கள் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT) பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு நுழைவுத்தேர்வும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலப் பாடத் திட்டங்களில் படித்த மாணவர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பினை வழங்கிடாது என்று இந்தப் பேரவை கருதுகிறது.

பெரும்பாலான மாநிலங்களில், மொத்த மாணவர்களில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமான மாணவர்கள் மாநிலப் பாடத் திட்டங்களில் பயின்று வருபவர்கள். இவர்கள் பெரும்பாலும் விளிம்புநிலைப் பிரிவினரைச் சேர்ந்தவர்களாவர். எனவே, என்.சி.இ.ஆர்.டி. பாடத் திட்ட அடிப்படையிலான நுழைவுத் தேர்வு, மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்குத் தகுதியான பெரும்பான்மையினருக்கு பாதகமான நிலையை ஏற்படுத்துவதோடு, இந்தச் சூழ்நிலை நம் நாட்டிலுள்ள பல்வேறு மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் இணைப்புக் கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கும் என்றும் இந்தப் பேரவை கருதுகிறது.

இந்நுழைவுத் தேர்வும், நீட் தேர்வைப் போன்றே நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிக் கல்வி முறைகளை ஓரங்கட்டி, பள்ளிகளில் நீண்ட காலக் கற்றல் முறைகளை வெகுவாகக் குறைத்து மதிப்பிட வழிவகுப்பதோடு, மாணவர்கள் தங்களது நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை அதிகரிக்க பயிற்சி மையங்களைச் சார்ந்திருக்கும் ஒரு சூழலை ஏற்படுத்திவிடும் என்பதில் ஐயமில்லை.

மேலும், மாணவர்களுக்கான பயிற்சி மையங்கள் புற்றீசல் போன்று வளர மட்டுமே இது சாதகமாக அமையும் என்று தமிழக மக்களிடையே அச்சம் எழுந்திருக்கிறது. இவ்வாறு ஒரு நுழைவுத் தேர்வினைச் செயல்முறைக்கு கொண்டு வருவதால், பள்ளிக் கல்வியோடு பயிற்சி மையங்களையும் நாடும் இளைய மாணவ சமுதாயத்தினர் பெரும் மனஉளைச்சலுக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

எனவே, மாநில அரசுகளின் உரிமையினை நிலைநாட்டும் பொருட்டு, மத்தியப் பல்கலைக்கழகங்களில் பல்வேறு படிப்புகளில் சேர்வதற்காக நடத்தவிருக்கும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினை ரத்து செய்திட ஒன்றிய அரசினை இந்தப் பேரவை வலியுறுத்துகிறது” எனும் தீர்மானத்தை நான் மொழிகிறேன்.” இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

அண்ணா தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு

முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்ய கோரும் தீர்மானத்திற்கு முதன்மை எதிர்க்கட்சியான அண்ணா தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. அந்த கட்சி தலைவர்கள் இந்த தீர்மானத்தை ஆதரித்து வரவேற்று பேசினார்கள். அதே சமயம் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனி தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், அதனை ரத்து செய்யக் கோரி பாஜக வெளிநடப்பு செய்கிறது எனக் கூறி வெளியேறினார். பாஜக உறுப்பினர்கள் 4 பேரும் வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தீர்மானத்திற்கு திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் அண்ணா திமுக ஆதரவு தெரிவித்த நிலையில் அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

முதல்வர் நன்றி

இளங்கலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது சட்டமன்றக் கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள் பேசிய பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து பேசியதாவது:–

நான் கொண்டு வந்திருக்கக்கூடிய இந்தத் தனித் தீர்மானத்தின்மீது, பாரதீய ஜனதா கட்சியைத் தவிர்த்து, இந்த அவையிலே இருக்கக்கூடிய மற்ற எல்லாக் கட்சிகளைச் சார்ந்த பிரதிநிதிகளும் தலைவர்களும் இங்கே வரவேற்றுப் பேசி, இந்தத் தீர்மானத்திற்கு ஒரு ஆக்கத்தையும் ஊக்கத்தையும் தந்திருக்கிறார்கள். அதற்காக முதலிலே நான் அவர்களுக்கெல்லாம் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்தத் தீர்மானம் தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வினைப் பிரதிபலிப்பதாக இருப்பதால், இந்தப் பொது நுழைவுத் தேர்வினை ரத்து செய்திட வேண்டுமென்று எட்டரை கோடி தமிழ் மக்களின் சார்பிலே ஒன்றிய அரசை இந்த மன்றத்தின் வாயிலாக நான் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழக மாணவர்களுடைய எதிர்காலம் பாதிக்காத வகையிலே, ஒன்றிய அரசு பொது நுழைவுத் தேர்வினை ரத்து செய்திட வேண்டுமென்று வலியுறுத்திக் கொண்டு வரப்பட்டிருக்கக்கூடிய இந்தத் தீர்மானத்தை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

error: Content is protected !!