உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் ;ஆனால் அதில் பாதி பேர் அகதிகள்! – ஐ நா கவலை

உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் ;ஆனால் அதில் பாதி பேர் அகதிகள்! – ஐ நா கவலை

சர்வதேச அளவில் கிட்டத்தட்ட 50 மில்லியன் குழந்தைகள் போர், வன்முறை மற்றும் துன்புறுத்தல்களால் தங்கள் தாய்நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. கூறியுள்ளது. ஐ.நா.வின் சர்வதேச குழந்தைகள் அவசர கால நிதியத்தின் நிர்வாக இயக்குநர் ஆண்டனி லேக் இப்பிரசனைப் பற்றி,“அய்லான் குர்தி என்ற 3 வயது சிறுவனின் உடல் கரையில் ஒதுங்கிக்கிடந்தது. ஐந்து வயதான சிறுவன் ஒம்ரான் டாக்னீஷ் சிரிய போரால் தரைமட்டமான தனது வீட்டிலிருந்து மீட்புப் படையினரால் வெளியே கொண்டு வரப்பட்டான். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தூசி படிந்த உடலோடு, தலையில் ரத்தக்காயங்களுடன் அச்சிறுவன் குழுப்பமான மனநிலையில் அமர்ந்திருக்கிறான். இந்த இரண்டு காட்சிகளும் உலகத்தையே உலுக்கியது. ஆனால் ஒவ்வொரு படமும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் அபாய நிலைகளை வெளிப்படுத்தும் விதமாகவே அமைந்திருக்கிறது” என்றார்.

world sep 7

அதாவது ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதி அமைப்பானது பதற்றம் நிறைந்த நாடுகளில் இருந்து சுமார் 5 கோடி குழந்தைகள் உலகம் முழுவதும் அகதிகளாக இடமாற்றம் ஆகியுள்ளதாக கூறியுள்ளது. இதுகுறித்து யுனிசெப் செயல் இயக்குநர் அந்தோனி லேக் தமது அறிக்கையில் , “குழந்தைகளின் துயரமான முகங்கள் உலகை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஒரு குழந்தையின் படமும் லட்சக்கணக்கான குழந்தைகள் பேராபத்தில் உள்ளதை வெளிப்படுத்துகிறது. மேலும் நம்முடைய உதவி அவர்களுக்கு தேவை என்பதையும் உணர்த்துகிறது.

கொஞ்சம் விளக்கமாக் கூறுவதானால் அகதிகளாக வெளியேறிய 10 மில்லியன் குழந்தைகளோடு, 28 மில்லியன் குழந்தைகள் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களால் புலம்பெயர்ந்துள்ளனர். இவர்களில் அகதிகள் அங்கீகாரம்கூட கிடைக்காமல் இன்னமும் 1 மில்லியன் குழந்தைகள் புகலிடம் தேடி அலைந்துகொண்டிருக்கின்றனர்.

சுமார் 17 மில்லியன் குழந்தைகள் தங்களின் சொந்த நாட்டுக்குள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர். சுமார் 20 மில்லியன் குழந்தைகள் குழு வன்முறை, அதீத வறுமை ஆகியவற்றால் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியிருக்கின்றனர்.இவர்கள் அனைவரும் எந்த வித ஆவணங்களும், பொருளாதார நிலையும் இல்லாததால் எப்போதும் வன்முறைக்கு உள்ளாகும் அபாயத்திலேயே இருக்கின்றனர். அவர்களைக் கண்காணிக்கவும், பாதுகாக்கவும் எந்த முறையான வசதியும் செய்யப்படவில்லை.

இதைத்தவிர சொந்த முயற்சியில் நாட்டைக் கடக்க எண்ணும் சிறார்களின் எண்ணிக்கையும் அதிகமாகி இருக்கிறது. சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறார்கள் சுமார் 78 நாடுகளில் தஞ்சமடைய விண்ணப்பித்துள்ளனர். இது 2014-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது மூன்று மடங்கு அதிகம்.

உலக மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கினர் குழந்தைகள். ஆனால் அதில் பாதி பேர் அகதிகளாகவே இருக்கின்றனர். 2015-ல் ஐ.நா.வின் கீழ் இருக்கும் குழந்தை அகதிகளில் சுமார் 45% பேர், சிரியா மற்றும் ஆஃப்கானிஸ்தானில் இருந்து வந்தவர்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது