மணிப்பூர் – பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு!

மணிப்பூர் – பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு!

ன்முறைக் களமாகி விட்ட, மணிப்பூரின் மாநில உள்துறை அமைச்சகம், மணிப்பூரை பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவித்திருக்கிறது. இது குறித்து வெளியான தகவலின்படி, அதிகரித்து வரும் வன்முறையைத் தொடர்ந்து, மணிப்பூர் மாநிலத்தின் 19 காவல் நிலையப் பகுதிகளைத் தவிர முழு மாநிலமும் பதற்றம் நிறைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மணிப்பூர் மாநிலம் முழுவதும் சிவில் நிர்வாகத்தின் உதவிக்காக ஆயுதப் படைகளைப் பயன்படுத்துவதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.அக்டோபர் 1ம் தேதி முதல் 6 மாதங்களுக்கு இந்த அறிவிப்பு அமலில் இருக்கும் என மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

மணிப்பூர் கடந்த மே மாதம் முதல் மேதி – குக்கி இன சமூத்தினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக உருவெடுத்து நாட்டையே உலுக்கியது. அதிலும், இரு பெண்களுக்கு ஒரு கொடூர கும்பலால் நேர்ந்த துயரம் பலரது இதயத்தை நொறுக்கியது. இந்த மோதல் பல மாதங்களாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதில், இரு பக்கமும் உயிர்சேதங்கள் ஏற்பட்டாலும் குக்கி இன மக்களுக்கு அதிக அளவில் உயிர்சேதங்கள் ஏற்பட்டன. 150க்கும் அதிகமானோர் இந்த கலவரத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கலவரத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் இன்னும் மணிப்பூர் இயல்பு நிலைக்கு திரும்பாமல் தான் இருந்து வருகிறது.

இருப்பினும், பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதால், அங்கு முன்பு அரங்கேறியது போல பெரிய கலவரங்கள், உயிர்சேதங்கள் ஏற்படாமல் தடுக்கப்பட்டு வருகின்றன. அப்படி இருந்து, சமீபத்தில் மணிப்பூரில் மேதி இனக் குழுவை சேர்ந்த 2 மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டிருந்தனர். இந்த 2 மாணவர்களும் சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருந்தது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக கூறப்பட்டாலும், மோதல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

இதனிடையே, மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட ஆளும் மாநில பாஜக அரசும் மத்தியில் ஆளும் பாஜக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. மணிப்பூர் வன்முறை சம்பவங்கள் குறித்து சிபிஐ குழு விசாரணை நடத்துகிறது. இந்த நிலையில், மணிப்பூரை பதற்றம் நிறைந்த மாநிலமாக அம்மாநில உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இம்பால், லாம்பல், சிங்ஜமேய் உள்பட 19 காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகள் அனைத்தும் பதற்றமானவையாக என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 6 மாதங்களுக்கு இந்த அறிவிப்பு அமலில் இருக்கும் என மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக வன்முறை கட்டுக்கடங்காமல் பரவி வருவதால் மாநில அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மாநில அரசின் நிர்வாகத்துக்கு உதவியாக ராணுவத்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடும் தீவிரவாத, பிரிவினைவாத குழுக்களுக்கு எதிராக ராணுவத்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என அம்மாநில ஆளுநர் அறிக்கை வாயிலாக கூறியுள்ளார்.

error: Content is protected !!