June 3, 2023

‘சந்திரமுகி 2’- வரப் போகுதுங்கோ- முழு விபரம்!

பி.வாசு இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சந்திரமுகி‘. இந்தப் படம் தமிழ் சினிமா வரலாற்றில் மாபெரும் சாதனையை படைத்தது. ஹாரர் மற்றும் காமெடி கலந்து இந்தப் படத்தில் ‘வேட்டையன்’ டாக்டர் சரவணன் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தார். அவருடன் பிரபு மற்றும் ஜோதிகா இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படத்தில் ரஜினியும் வடிவேலும் இணைந்து கலக்கிய காமெடி காட்சிகள் தமிழ் திரை ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. வடிவேலு பேசிய ‘வச்சுட்டான்யா ஆப்பு’ என்ற வசனம் மறக்க முடியாததாக மாறியது. இதனை சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்தது. மொத்தம் இப்படம் 890 நாட்கள் சென்னையில் உள்ள சாந்தி தியேட்டரில் திரையிடப்பட்டது. ஒரே திரையரங்கில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் திரையிடப்பட்ட இந்தப் படம் கோலிவுட்டில் மிகப்பெரிய சாதனையைப் படைத்தது.

இதனிடையே டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், ‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க விருப்பம் தெரிவித்திருந்தார். ஆக, எப்படியோ ‘சந்திரமுகி 2’ உறுதியாக எடுக்க வாய்ப்புள்ளது என எதிர்பார்த்திருந்த வேலையில் ‘சந்திரமுகி’ இயக்குநர் பி. வாசுவே முதன்முறையாக மவுனம் கலைத்து அளித்த பேட்டி ஒன்றில் ஏற்கெனவே ‘சந்திரமுகி 2’ திரைக்கதையை எழுதி விட்டதாகவும் அதற்காக ஒரு நடிகரை அணுகி கதை கூறி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் பெரிய தயாரிப்பாளரையும் சந்தித்து கதையை விளக்கி உள்ளதாகவும் அவர் பேசியுள்ளார். ஆனால் ரஜினியிடம் பேசியதாக அவர் கூறவில்லை. எனவே இந்தப் படத்தில் அவருக்குப் பதிலாக யார் நடிப்பார் என்ற சந்தேகம் எழுந்து இருந்தது..

இச்சூழலில் லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் ‘சந்திரமுகி 2’ எனும் புதிய பிரம்மாண்டத் திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கிறார்கள். இதனை ‘சந்திரமுகி’ படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி வாசு இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கே. எம். தமிழ் குமரன் மேற்பார்வையில் உருவாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பு பணிகளை பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி கவனிக்கிறார். ‘பாகுபலி’, ‘ஆர் ஆர் ஆர்’ பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா பானு கலை இயக்குநர் பொறுப்பை ஏற்க, ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்தப் படத்தில் பணியாற்றும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டான்’ படத்தின் மாபெரும் வசூல் சாதனையைத் தொடர்ந்து, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘பொன்னியின் செல்வன் முதல் பாகம்’ படத்திற்கு சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றியைப் பெற்ற ‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மிகப் பிரம்மாண்டமாக தயாரிப்பதால், ‘சந்திரமுகி 2’ படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகும் போதே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது