லோக்சபா மற்றும் ராஜ்யசபா டிவிக்களை இணைத்து சன்சத் டிவி என்ற புதிய சேனல் உருவாக்கம்!
மாநிலங்களவை தலைவர் மற்றும் மக்களவை சபாநாயகர் ஆகியோர் இணைந்து எடுத்த முடிவின்படி இவ்விரு டிவிக்களும் இணைக்கப்பட்டு சன்சாத் டிவி என்னும் பெயரில் ஒரே டிவியாக இயங்க உள்ளது. சன்சத் என்பதற்கு பார்லிமென்ட் என்று பொருள்.
மக்களவை மற்றும் மாநிலங்களவை நடவடிக்கைகள் குறித்த நிகழ்வுகள் இனி ஒரே தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பப்படும். இந்த தொலைக்காட்சி சேனலுக்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரவி கபூர் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஒரு வருடம் வரை அல்லது அடுத்த உத்தரவு வரை இந்த பதவியில் நீடிப்பார். மேலும், சேனல் துவக்க விழா குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மக்களவை செயல்படும் போது அதன் நேரலையை மக்களவைத் தொலைக்காட்சியும், மாநிலங் களவையின் நடவடிக்கைகளை மாநிலங்களவைத் தொலைக்காட்சியும் வழக்கம் போல ஒளிபரப்பும்.
அதே வேளையில், இரு அவைகளின்ன் கூட்டு நடவடிக்கை மற்றும் அவை நடவடிக்கைகள் இல்லாத நேரத்தில், இரண்டு தொலைக்காட்சிகளிலும் ஒரே நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும். மக்களவையில் ஒரு நிகழ்ச்சி இந்தியிலும், மாநிலங்களவையில் அதே நிகழ்ச்சி ஆங்கிலத்திலும் ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிவி மூலமாக மக்கள் தங்களுடைய தொகுதி எம்.பி.,க்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளலாம்.