உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் உலகளாவிய தொழில்நுட்பப் பங்குகளின் வீழ்ச்சிக்கு இடையேயும், இந்திய தகவல் தொழில்நுட்ப (IT) துறை ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில், இந்தியாவின் முன்னணி ஐந்து ஐடி நிறுவனங்களின் ஒட்டுமொத்த பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்தபோதிலும், ஊழியர்களின் தனிநபர் உற்பத்தித்திறன் (Employee Productivity) ஆண்டுக்கு ஆண்டு 3.3% அதிகரித்துள்ளதாக சில பல பகுப்பாய்வுகள் சுட்டிக்காட்டுகிறது.
தொழில்நுட்ப நிறுவனங்கள் புதிய ஆட்களைப் பெருமளவில் வேலைக்கு எடுப்பதைக் குறைத்துவிட்டு, இருக்கும் மனிதவளத்தை மிகத் துல்லியமாகப் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதே இந்த எதிர்பாராத வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
தனிநபர் வருவாயில் புதிய உச்சம்
கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், இந்திய ஐடி துறையில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியரும் நிறுவனத்திற்கு ஈட்டித் தரும் சராசரி வருவாய் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
-
தற்போதைய காலாண்டில்: ஒரு ஊழியரின் சராசரி வருவாய் $13,435 ஆக உயர்ந்துள்ளது.
-
கடந்த ஆண்டில்: இது $13,010 ஆக இருந்தது.
-
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு: கோவிட் காலத்திற்கு முந்தைய கட்டத்தில் இது வெறும் $11,865 ஆக மட்டுமே இருந்தது.
இந்த புள்ளிவிவரங்கள், ஐடி நிறுவனங்கள் தங்களின் இயக்கச் செலவுகளைக் குறைத்து, வருவாயை அதிகரிக்கும் உத்தியில் மிகப்பெரிய வெற்றியைக் கண்டுள்ளதை உறுதிப்படுத்துகின்றன.

எச்.சி.எல் டெக் முதலிடம்: நிறுவனங்களின் செயல்பாடு
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் எச்.சி.எல் டெக்னாலஜிஸ் (HCLTech) ஊழியர் ஒருவருக்கான வருவாயில் $16,303 ஈட்டி முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), இன்ஃபோசிஸ் (Infosys), எச்.சி.எல் டெக் மற்றும் டெக் மஹிந்திரா ஆகிய நான்கு முன்னணி நிறுவனங்களுமே ஊழியர் உற்பத்தித்திறனில் சிறப்பான வளர்ச்சியைக் பதிவு செய்துள்ளன.
இருப்பினும், விப்ரோ (Wipro) நிறுவனம் இதில் ஒரு விதிவிலக்காக அமைந்தது. ‘மைண்ட்ச்பிரின்ட்’ (Mindsprint) நிறுவனத்தை விப்ரோ கையகப்படுத்தியதால் அதன் ஒட்டுமொத்த பணியாளர்களின் எண்ணிக்கை சட்டென்று அதிகரித்தது. இதன் காரணமாகவே விப்ரோவின் தனிநபர் உற்பத்தித்திறன் விகிதம் சற்றே சரிவைக் கண்டுள்ளது.
இந்த திடீர் மாற்றத்திற்கு பின்னணியில் உள்ள காரணங்கள்
குறைவான பணியாளர்களை வைத்து அதிக வருவாயைப் ஈட்டும் இந்த மாற்றத்திற்கு நிறுவனங்கள் எடுத்த சில அதிரடி முடிவுகளே காரணம் என்கிறார் ‘டீம்லீஸ் டிஜிட்டல்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நிதி சர்மா.
-
பெஞ்ச் வலிமை குறைப்பு (Minimal Bench Strength): திட்டங்களில் உடனடியாக ஈடுபடாமல் காத்திருப்போர் பட்டியலில் (Bench) வைக்கப்படும் ஊழியர்களின் எண்ணிக்கையை நிறுவனங்கள் பெருமளவில் குறைத்துள்ளன.
-
பயன்பாட்டு விகிதம் அதிகரிப்பு (Resource Utilisation): நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு ஊழியரின் வேலை நேரமும் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதை நிர்வாகங்கள் உறுதி செய்துள்ளன.
-
தேர்ந்தெடுக்கப்பட்ட வேலைவாய்ப்புகள்: பொதுவான ஆட்கெடுப்பைக் குறைத்துவிட்டு, செயற்கை நுண்ணறிவு (AI), கிளவுட் தொழில்நுட்பம் (Cloud) மற்றும் சைபர் பாதுகாப்பு (Cybersecurity) போன்ற உயர் மதிப்புமிக்க துறைகளில் மட்டுமே திறமையான பணியாளர்களைச் சேர்த்துள்ளனர்.
உலகளாவிய வீழ்ச்சிக்கு இடையே இந்திய ஐடி பங்குகளின் ஏற்றம்
உலக அளவில் தொழில்நுட்பப் பங்குகள் விற்பனை அழுத்தத்தைச் சந்தித்து சரிவைக் கண்டு வந்த நிலையிலும், இந்திய பங்குச்சந்தையில் ஐடி பங்குகள் செவ்வாய்க்கிழமை அன்று அதிரடி உயர்வைச் சந்தித்தன.
நிஃப்டி ஐடி குறியீடு (Nifty IT Index) ஒரே நாளில் 3.3% உயர்ந்து முதலீட்டாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கோஃபோர்ஜ் (Coforge) நிறுவனம் அதிகபட்ச உயர்வைப் பதிவு செய்த நிலையில், டிசிஎஸ், எம்பாசிஸ், டெக் மஹிந்திரா மற்றும் பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் நல்ல ஏற்றத்தைக் கண்டன. ஒட்டுமொத்த நிஃப்டி குறியீட்டில் பெரிய மாற்றங்கள் இல்லாத நிலையிலும், ஐடி துறை பங்குகள் மட்டும் தனித்து நின்று சாதனை படைத்துள்ளன.
தமிழ்செல்வி

