கர்நாடகா முதல்வர் ஆகிட்டார் குமாரசாமி –
திட்டமிட்டப்படி கர்நாடகா மாநிலத்தின் 24வது முதல்வராக மதசார்பற்ற ஜனதா தளத் தலைவர் குமாரசாமி தேவ கவுடா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கடந்த 12ஆம் தேதி நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து 78 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தது. காங்கிரஸ் கட்சியின் ஆதரவை முழு மனதோடு ஏற்று கொள்வதாக அறிவித்த மத சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைப்பதாக அறிவித்தது. இதனிடையே, 104 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக ஆட்சி அமைக்க ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார்.
இதனால் பாஜக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றார்.
எடியூரப்பா சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 14 நாட்கள் அவகாசம் வழங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. அவசர வழக்காக மனுவை ஏற்று கொண்டு விசாரித்த உச்சநீதிமன்றம், எடியூரப்பா மே 19ஆம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து மே 19ஆம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்கும் முன் சட்டப்பேரவையில் எடியூரப்பா உரைநிகழ்த்தினார். பின்னர் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதை அறிந்ததால் அவரது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பின்னர் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
இதையடுத்து, மதசார்பற்ற ஜனதா தளத் தலைவர் குமாரசாமி ஆட்சி அழைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட குமாரசாமி இன்று பெங்களூரு விதான் சவுதாவில் நடந்த பதவியேற்பு விழாவில் கர்நாடகாவின் 24வது முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான பரமேஸ்வரா துணைமுதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.
இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், உபி முன்னாள் முதல்வர்கள் அகிலேஷ் யாதவ், மாயாவதி, பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், புதிதாக உருவாக்கப்பட்ட எல்.ஜே.டி தலைவர் சரத் யாதவ், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சியுடன் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், பரமேஸ்வரா துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியினருக்கு 22 அமைச்சர் பதவியும் மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த 12 எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவியும் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி பலத்தை நிரூபிக்க உள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி பெற்ற பின்னர் மற்ற அமைச்சர்கள் பதவியேற்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கர்நாடகம் முழுக்க இன்று பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தியது. மக்கள தீர்ப்பு சீர்குலைக்கப்படுவதாக பாஜக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.