கர்நாடகா இ-பைக் டாக்ஸி திட்டத்தை திரும்பப் பெற்றது!

கர்நாடகா இ-பைக் டாக்ஸி திட்டத்தை திரும்பப் பெற்றது!

ர்நாடக அரசு மின்சார பைக் டாக்சி சேவைகள் “பெண்களுக்கு பாதுகாப்பற்றவை” மற்றும் “சட்டவிரோதமானது” மற்றும் “மோட்டார் வாகனச் சட்டத்தை மீறியவை” எனக் கூறி, மாநிலத்தில் அவை இயங்குவதை அனுமதித்த முடிவை திரும்பப் பெற்றுள்ளது. எலக்ட்ரிக் பைக் டாக்ஸி திட்டம், 2021, மார்ச் 6 அன்று அரசு உத்தரவு போட்டதை திரும்பப் பெறப்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த பா.ஜ.க. ஆட்சியில் 2021ம் ஆண்டு ஓலா, ஊபர் மற்றும் ரேபிடோ உள்ளிட்ட பைக் டாக்சிகளுக்கு அப்போதைய அரசு அனுமதி வழங்கியது. அன்று முதல் கர்நாடக தலைநகர் பெங்களூரு உட்பட பல்வேறு மாவட்டங்களில் அவை இயங்கி வருகின்றன. இதற்கு வாடகை கார், ஆட்டோ டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களின் வாழ்வாதாரம் பறிபோவதாக குற்றஞ்சாட்டி வந்தனர். இருப்பினும் அன்றைய அரசு அதில் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.

பைக் டாக்சிகளில் இரவில் செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன. கடந்த ஓராண்டுக்கு முன்பு பெங்களூருவில் பைக் டாக்சியில் சென்ற பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது பைக் டாக்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

பெண்கள் பாதுகாப்பு, ஆட்டோ ஓட்டுநர்களின் வருவாய் பாதிப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு கர்நாடக அரசு போக்குவரத்து துறை பைக் டாக்சிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகா அரசின் போக்குவரத்து துணை செயலர் புஷ்பா வெளியிட்ட உத்தரவில் பைக் டாக்சிகள் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை. பைக் டாக்சிகளின் தேவையை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் பைக் டாக்சிகள் பெரிய அளவில் மக்களுக்கு உதவவில்லை என்று கூறியுள்ளனர். இதனால் கர்நாடகாவில் பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். கர்நாடக அரசின் இந்த உத்தரவை வாடகை கார், ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர், பெண்கள் வரவேற்றுள்ளனர்.

error: Content is protected !!