ஜாமர், ஜி.பி.எஸ் பிளாக்கர் கருவிகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த தடை!
![ஜாமர், ஜி.பி.எஸ் பிளாக்கர் கருவிகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த தடை!](https://www.aanthaireporter.in/wp-content/uploads/2022/07/tools-jy-4a.jpg)
இந்தியாவில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வசதியால் மக்கள் எளிதாக இருந்த இடத்திலேயே அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றனர். இதனால் நேரமும் வேலையும் மிச்சமாகிறது. அதே நேரத்தில் இதனால் பல்வேறு விளைவுகளும் ஏற்படுகிறது. குறிப்பாக நாம் எந்த நேரமும் கைகளில் வைத்திருக்கும் ஸ்மார்ட் போன்களினால் நமக்கு பல்வேறு ஆபத்துகள் வந்த வண்ணம் உள்ளது. அதாவது இந்த தொழில்நுட்பம் வாயிலாக மற்றவர்களின் செல் போன்களை ஹேக் செய்ய முடியும். இதன் மூலம் மறைமுகமாக பலரது ரகசிய தகவல்களை அறிய முடியும். ஆனால் இது சட்ட ரீதியாக விரோதமான செயலாகும்.இது போன்ற சட்டத்திற்கு புறம்பாக நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க அதனால் மத்திய அரசு சிக்னல் ஜாமர், ஜி.பி.எஸ் பிளாக்கர் கருவிகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளது.
மத்திய தொலைத் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- மத்திய அரசின் அனுமதியில்லாமல், செல்போன் தகவல் தொடர்புகளை செயலிழக்கச் செய்யும் சிக்னல் ஜாமர் கருவிகள், ஜிபிஎஸ் பிளாக்கர் மற்றும் இதர செயலிழப்பு செய்யக்கூடிய கருவிகளை தனிநபர் மற்றும் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட நிகழ்ச்சிகளை தவிர பிற நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவது சட்டவிரோதமானது. இந்தியாவில் தகவல் தொடர்பை செயலிழக்கச்செய்யும் கருவிகளை தனியார் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் கொள்முதல் செய்யமுடியாது.
இதுகுறித்து விளம்பரம் செய்வது, விற்பனை, விநியோகம் மற்றும் இறக்குமதி செய்வதும் சட்டவிரோதம். சமிக்ஞை பூஸ்டர்களைப் பொருத்தவரை, உரிமம் பெறப்பட்ட தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களைத் தவிர இதர நிறுவனங்களோ அல்லது தனிநபரோ செல்பேசி சமிக்ஞை பூஸ்டர்களை வாங்குவதும், விற்பதும் சட்டவிரோதமானது. கம்பியில்லா ஜாமர்களை தங்களது இணையவழி தளத்தில் விற்பனை செய்யக்கூடாது என்றும் தொலைத்தொடர்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.